அரசியல் தீர்வு கட்சிகளுக்கானதல்ல மக்களுக்கானது..!
அரசியல் தீர்வு கட்சிகளுக்கானதல்ல மக்களுக்கானது. எனவே மக்களும் பங்கு பற்றுகின்ற ஒரு அரசியல் தீர்வு செயற்பாடே மக்களினால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும் என அரசியல் ஆய்வாளரும், சட்ட தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி. அ. யோதிதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு தொடர்பான தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்த முயற்சிகளில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ள பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி எழுதியுள்ள அரசியல் ஆய்வு காட்டுறையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் தீர்வு
அதன் முழு விபரமும் வருமாறு
அரசியல் தீர்வு தொடர்பான தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்த முயற்சிகளில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.
தமிழ்த் தேசியப் பேரவை ஈழத் தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் அறிக்கையை வெளியிட்டதே இதற்கு காரணமாகும்.
பெப்ரவரி 15 ஆம் திகதி தமிழ்த் தேசியப் பேரவை சிவில் அமைப்புகள், தனி நபர்களை அழைத்து ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணயப் பொதுச் சபை என்ற அமைப்பினை உருவாக்கி அரசியல் தீர்வு வரைபைத் தயாரிப்பதற்கான நிபுணர் குழுவையும் அறிவித்திருந்தது.
அது தொடர்பான அறிக்கையே கடந்த 17ஆம் திகதி வெளிவந்திருந்தது. இது தொடர்பான செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தன. தற்போது உத்தியோக பூர்வ அறிக்கை வெளி வந்திருக்கின்றது. தமிழரசுக் கட்சி இதனைக் கண்டித்து அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி அரசியல் தீர்வு முயற்சிகளை குழப்ப முனைகின்றது என தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது.

தமிழ்த் தேசியப் பேரவையின் முயற்சியானது அரசியல் தீர்வு செயற்பாடுகளை மக்கள் மயமாக்கும் முயற்சியாகும். தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அரசியல் தீர்வு செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு முன்னரே அந்த முயற்சி தொடங்கி விட்டது.
இது ஒருபோதும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்க மாட்டாது. அதன் செயற்பாடுகளுக்கு துணையாகவே அமையும் என தமிழ்த் தேசியப் பேரவை தனது செயற்பாடுகளை நியாயப்படுத்துகின்றது. அரசியல் தீர்வு முயற்சிகள் இரகசியமாக நடாத்தப்படக் கூடாது.
மக்கள் பங்கேற்பு அதில் இருக்க வேண்டும் எனவே எமது முயற்சிகளை நாம் நிறுத்தப் போவதில்லை என தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவைக்கு தமிழத் தேசியப் பேரவை அறிவித்ததாகவும் செய்திகள் வருகின்றன. தமிழ்த் தேசியப் பேரவையின் இந்த முடிவிற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
அதில் முதலாவது ஏற்கனவே கூறியது போல அதன் அரசியல் நிலைப்பாடாகும். அரசியல் தீர்வு முயற்சிகள் மக்கள் மயப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே அந்த நிலைப்பாடாகும். அரசியல் தீர்வு கட்சிகளுக்கானதல்ல மக்களுக்கானது.
தமிழரசுக் கட்சி
எனவே மக்களும் பங்கு பற்றுகின்ற ஒரு அரசியல் தீர்வு செயற்பாடே மக்களினால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கும். தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சிகளில் மக்கள் பங்கேற்பு பெரிதாக இல்லை. அவர்களது நிபுணர் குழுவிலும் கட்சி சார்பானவர்களே அதிகம் உள்ளனர்.
கட்சி சாராத பொது முகத்தை அங்கு பெரிதாக காண முடியவில்லை. அரசாங்கத்திற்கு சார்பாக இருந்தவர்களும் நிபுணர் குழுவில் இருக்கின்றனர்.
இரண்டாவது தமிழ்த் தேசியப் பேரவையிடம் தமிழரசுக் கட்சி தொடர்பாகவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தொடர்பாகவும் நம்பிக்கைக் குறைவு அதிகமாக இருக்கின்றது.

இவர்கள் சரியான அரசியல் தீர்வை உருவாக்க மாட்டார்கள் என்ற சந்தேகம் அதற்கு உண்டு. தமிழரசுக் கட்சி முழுக்க முழுக்க சுமந்திரன் என்கின்ற தனி நபரின் கட்டுப்பாட்டில் உள்ளது. சுமந்திரன் என்ற தனிநபர் எடுக்கின்ற முடிவுகளே கட்சியின் தீர்மானங்களாக இருக்கும். சுமந்திரன் ஏற்கனவே “ஏக்கியராச்சிய தீர்வை” ஏற்றுக் கொண்டவர்.
இன்றுவரை அதனை நிராகரித்து விட்டேன் என அவர் பகிரங்கமாக கூறவில்லை. ஏக்கியராச்சியத்திற்குள் சமஸ்டி உண்டு என்றே கூறி வருகின்றார்.
அவர் எந்த நேரமும் விலை போகலாம் என்ற கருத்து தமிழ் தேசிய பேரவையிடம் ஆழமாக உள்ளது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கை நிலைப்பாடு எதுவும் கிடையாது. யாருடன் கூட்டுச் சேர்ந்தால் பதவிகள் கிடைக்கும் என்பதில் மட்டும் அது அக்கறையாக இருக்கின்றது.
தீர்வு விடயத்தில் 13 வது திருத்தத்துடன் திருப்திப்பட அது தயாராக இருக்கின்றது. மக்கள் அபிப்பிராயம் சமஸ்டிக்கு சார்பாக இருப்பதால் சமஸ்டிக்கு ஆதரவாக இருப்பதாக வெளிப்படுத்துகின்றதே ஒழிய என்றைக்கும் அது சமஷ்டிக் கோரிக்கைக்கு விசுவாசமாக இருக்கவில்லை.
ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு
இதன் மீது நம்பிக்கை வைத்து ஏற்கனவே தமிழ்த் தேசியப் பேரவை கையை சுட்டுக் கொண்டுள்ளது எனவே தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க அது தயாராக இல்லை.
மக்கள் பக்கத்திலிருந்து அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் இந்தத் தரப்புகளை அசைய வைக்கலாம் என்று மட்டும் கருதித்தான் இத்தரப்புக்களுடன் ஒருங்கிணைவு அரசியலுக்கு அது சென்றிருக்கின்றது.
தற்போது அது ஈழத்தமிழர் அரசியல் அமைப்பு நிர்ணய பொதுச் சபையின் செயற்பாடுகளை முடுக்கி விடுவதற்கான காரணமும் மக்களிடமிருந்து இத்தரப்புகளுக்கு அழுத்தம் வர வேண்டும் என்பதுதான். மக்கள் தரப்பிலிருந்து அழுத்தங்கள் வரப்போகின்றது என்பதற்காகத்தான் தமிழரசுக் கட்சி பொதுச்சபையை எதிர்க்கின்றது.

மூன்றாவது தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியப் பேரவைக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. தமிழ்த் தேசியப் பேரவையைச் சேர்ந்த ஏனைய கட்சிகள் பங்குபற்றுவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
சுமந்திரன் தமிழ்க் காங்கிரஸ் என உச்சரிக்கின்றாரே தவிர தமிழ்த் தேசியப் பேரவை என அழைக்கவும் அவர் தயாராக இருக்கவில்லை.
அவர்கள் தெளிவாக தாம் தமிழ்த் தேசியப் பேரவையாகத்தான் இதில் பங்கு பற்றுகின்றோம். எனக் கூறிய பின்னரும் இணையவழியில் அவர்கள் பங்கு பெறுவது குழப்பப்பட்டது. இறுதியில் தமிழ்த் தேசியப் பேரவையினர் இணையவழி கலந்துரையாடலில் இருந்து வெளியேறினர்.
இத்தனைக்கும் 3 பேர் இணையவழிக் கலந்துரையாடலில் பங்குபற்றலாம் என தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை கூறிய போதும் நடைமுறையில் ஏற்கப்படவில்லை. இத்தனையையும் குழப்புவதில் சுமந்திரனே பங்காற்றியிருந்தார்.
ஒரு பெரிய கட்சி என்ற வகையில் அனைத்துத் தரப்பையும் அணைத்துப் போகும் தார்மீக மனோபாவம் தமிழரசுக் கட்சியிடம் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக அக் கட்சியை வழிநடாத்தும் சுமந்திரனிடம் இருந்திருக்க வேண்டும்.
சுமந்திரனிடம் இப்பண்பு மருந்துக்கு கூட இருக்கவில்லை. எதிரிகளை அணுகுவது போலவே சக கட்சிகளை அவர் அணுகியிருந்தார். தமிழரசுக் கட்சிகளின் மூலவர்களான தந்தை செல்வாவிடமும், அ.அமிர்தலிங்கத்திடமும் இருந்த இப்பண்பு சுமந்திரனிடம் இல்லாதது கவலைக்குரியது. நிபுணர்களை தெரிவு செய்த போது சுமந்திரனே பெயர்களை சிபாரிசு செய்திருந்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியினர்
தமிழ்த் தேசியப் பேரவையினர் தெரிவு செய்வதற்கு எந்தவித சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை. தலைமையுடன் பேசிய பின்னரே நிபுணர் குழுவிற்கு சம்மதத்தை தர முடியும் என தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதி கூறியபோது அது கணக்கெடுக்கப்படாமலே நிபுணர் குழுவில் அங்கம் வகிப்பவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. அதில் பெரும்பாலானோர் சட்டத்தரணிகளாகவே இருந்தனர்.
அரசியல் அறிஞர்கள் எவரும் இருக்கவில்லை. இத்துறையில் அனுபவம் மிக்க பேராசிரியர்களும் கருத்துருவாக்கிகளும், தாயகத்தில் வாழ்கின்ற போதும் அவர்கள் இணைக்கப்படவில்லை. இது வேண்டுமென்று அனைத்துக் கருமங்களும் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் வகையில் சுமந்திரன் காய்களை நகர்த்தியிருக்கின்றார். மொத்தத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் முரண்படக்கூடிய சூழலை கச்சிதமாக சுமந்திரன் உருவாக்கியிருந்ததார்.
நான்காவது ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான பொறிமுறை உருவாக்கப்படாமையேயாகும். ஒருங்கிணைந்த செயற்பாட்டுக்கு கொள்கை உறுதி, சம பங்காளர் அந்தஸ்து, அமைப்புப் பொறிமுறை, என்பன முக்கியமானவையாகும்.

இதில் ஒன்று பலவீனமாக இருந்தாலும் ஒருங்கிணைவுச் செயற்பாடு முன்னேறிச் செல்வதற்கு வாய்ப்புகள் இருக்காது. இதில் கொள்கை உறுதிக்கான உத்தரவாதம் முதலாவது கூட்டத்திலேயே பெறப்பட்டது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது.
எனினும் சம்பந்தப்பட்ட தரப்புகள் தொடர்ச்சியாக இதில் உறுதியாக இருக்கும் போதே மகிழ்ச்சி நீடிக்கக் கூடியதாக இருக்கும் தரப்புக்களுக்கிடையேயான முரண்பாடுகள் அதிலும் சந்தேகங்களை உருவாக்கியிருந்ததைத் தான் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இரண்டாவது சமபங்காளர் என்ற அந்தஸ்தாகும். இது மிகவும் முக்கியமானதாகும்.
பங்கு பற்றும் தரப்புக்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும். ஒரு தரப்பு தோல்வியடைந்தாலும் குழப்ப நிலையே உருவாகும். கட்சிகள் என்ற வகையில் மூன்று அணியினர் இருந்தனர். தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியப் பேரவை என்பனவே அம்மூன்றுமாகும்.
தமிழ் மக்கள் கூட்டணியினர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதால் அவர்களை தமிழரசுக் கட்சி அணிக்குள் இணைத்துக் கொள்ளலாம்.
தீர்மானங்கள் மூன்று தரப்பினரும் இணைந்து ஏக மனதாக எடுப்பதாக இருக்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக இந்த சமபங்காளர் அந்தஸ்து செயற்பாட்டில் பேணப்படவில்லை. அனைத்து செயற்பாட்டிலும் தமிழரசுக் கட்சியின் கையே மேலோங்கி இருந்தது.
தமிழ்த் தேசியப் பேரவையினர் ஒதுக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் கருத்துக்களை கூறுவதற்கு போதிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
முடிவுகள் அவர்களது அனுமதியில்லாமலே வெளியிடப்பட்டன. மூன்றாவது அமைப்புப் பொறிமுறையாகும். இது ஒழுங்காக உருவாக்கப்படவில்லை. இதில் பெரிய பங்கினை இச் செயற்பாட்டினை நெறிப்படுத்திய சட்டத்தரணிகள் பேரவையே வகித்திருக்க வேண்டும்.
முரண்பாடுகள் ஏற்படும் போது உடனடியாகவே அதனைத் தீர்ப்பதற்கான பொறிமுறை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். நெறிப்படுத்தல் பணியைக் கூட சட்டத்தரணிகள் பேரவை மேற்கொள்வதற்கு பதிலாக சுமந்திரன் மேற்கொள்ளும் முறையே நடைமுறையில் இருந்தது.
நிலைமைகள் எப்படி இருந்த போதும் இன்னமும் காலம் கடந்து விடவில்லை என்றே இக்கட்டுரையாளர் கருதுகின்றார். தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை சற்று தீவிரத்துடன் முனைந்தால் நிலைமைகளை சீர் செய்யலாம்.
தமிழ் மக்களின் இருப்பு
முதலில் சமபங்காளர் என்பதனை தரப்புகளிடைய உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியப் பேரவையுடன் ஒரு மனம் திறந்த உரையாடலை நடாத்த வேண்டும். அவர்கள் தமிழ்த் தேசியப் பேரவையாக செயற்பாடுகளில் கலந்து கொள்வதற்கான உத்தரவாதத்தினை வழங்குதல் வேண்டும்.
அநேகமான முரண்பாடு அமைப்புத் துறையுடன் சம்பந்தப்பட்டது. தமிழ் மக்களுடைய வரலாறு முழுவதும் அமைப்புத் துறையே பலவீனமானதாக இருந்திருக்கின்றது.
இன்று கட்சிகளுக்குள்ளான முரண்பாடுகள், கட்சிகளுக்கிடையேயான முரண்பாடுகள், அரசியல் செயற்பாட்டாளர்களுக்கிடையிலான முரண்பாடுகள் அனைத்திற்கும் அமைப்புத்துறையே காரணமாக இருக்கின்றது.
ஒரு ஜனநாயகப் பண்புகள் கொண்ட அமைப்புத்துறையை கட்டியெழுப்புவதில் தமிழ் அரசியல் வரலாற்று ரீதியாக தோல்வி கண்டிருக்கின்றது. இதனால் தொடர் செயற்பாடுகள் அனைத்தும் பாதிப்புகுள்ளாகின்றது. விடுதலை இயக்கங்கள், அரசியல் கட்சிகள், வெகுஜன அமைப்புகள் எவையும் இதற்கு விதிவிலக்காக இருக்க வில்லை.
இந்தப் போக்கினை தொடர்ச்சியாக அனுமதிக்க முடியாது. இதில் மாற்றங்களை கண்டாக வேண்டும். இதற்கான புலமை உழைப்பை வழங்க பல்கலைக் கழக சமூகம் தயாராக இருக்க வேண்டும், உலக ரீதியாக விடுதலைப் போராட்டங்கள் அமைப்புத்;துறைப் பிரச்சனைகளை எவ்வாறு தீர்வு கண்டன என்பதையும் கற்றாக வேண்டும்.
தோழர் மாசேதுங்கின் நூல்கள் இதற்கு பல வழிகளிலும் உதவியாக அமையும். அடுத்தது மக்கள் பங்கேற்பையும் அரசியல் தீர்வு முயற்சிகளில் உள்வாங்கிக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை இவ் விடயத்திலும் கவனம் செலுத்துவது மிகவும் கட்டாயமானது.
இதில் இரகசியம் பேணவேண்டிய எந்த அவசியமும் இல்லை. கூட்டங்களை கொழும்பில் மட்டும் நடாத்துவதால் மக்கள் பங்கேற்பை உறுதிப்படுத்த முடியாது. தொடர்ச்சியாக கொழும்பில் கூட்டங்களை நடாத்துவது கொழும்பு மைய அரசியலுக்கும் வழி கோலுவதாக அமைந்து விடும்.
எனவே தாயகத்தில் கூட்டங்களை நடாத்துவதற்கு தயாராக வேண்டும். வவுனியா மாவட்டம் தாயகத்தின் மையமாக அதிகம் பொருத்தமானதாக இருக்கும்.
அரசியல் தீர்வு விவகாரம் கட்சிகளின் சொந்தப் பிரச்சனையல்ல. அது தமிழ் மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சினை. இது விடயத்தில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்வது மிகவும் அவசியமானது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 14 மணி நேரம் முன்
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri