போதையில் அட்டகாசம் செய்த நபர் பொலிஸாரால் கைது (VIDEO)
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி வீதி லிங்கநகர் பிரதேசத்தில் பிரதான வீதியில் குடிபோதையில் அட்டகாசம் செய்த நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (24) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குடிபோதையில் திருகோணமலை கண்டி வீதி பிரதான வீதியில் பயணித்த வாகனங்களுக்கு கற்களால் எறிந்து சேதப்படுத்தியதுடன், வீதியால் பயணித்த பயணிகளுக்கும் இடையூறு விளைவித்து வீதியால் பயணித்த பெண்கள் மீது முறையற்ற விதத்தில் நடந்து கொண்டமையினால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குறித்த நபரை தாக்கி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு குடிபோதையில் அட்டகாசம் செய்த குறித்த நபர் கந்தளாய் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் (30வயது)எனவும், சிகிச்சை ஒன்றிற்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்ததாகவும்,இன்றைய தினம் நகரில் பல வர்த்தக நிலையங்களில் அட்டகாசம் செய்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு குடிபோதையில் அத்துமீறி நடந்துகொண்ட நபரினால் அதிசொகுசு மோட்டார் கார் ஒன்று சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களால் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரை கைது செய்து சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.




