எதிர்காலத்தை கட்டியெழுப்பும் ஒரே கட்சி ஐ.தே.க! ரணில் விக்ரமசிங்க உறுதி
எதிர்காலத்தை கட்டியெழுப்பக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சியேயாகும் என அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்காக புதிய அலைபேசி செயலியொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்வில் இன்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
டிஜிட்டல் கட்சி உறுப்புரிமையை அறிமுகம் செய்யும் முதல் கட்சியாக நாம் செயற்படுகின்றோம். நாளையை கட்டியெழுப்பும் கட்சியே எமது கட்சி. எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் 2003ம் நாட்டில் அரிசியில் தன்னிறைவை ஏற்படுத்தினேன்.
சுவசெரிய நோயாளர் காவு வண்டி அறிமுகம் செய்தேன். நாம் சிலவற்றை தூர நோக்குடன் செய்தோம் ஏனையோருக்கு இது புரியவில்லை. மாணவர்களுக்கு டெப் கொடுக்க முயற்சித்த போது உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
பிள்ளைகள் மலட்டுத்தன்மையை அடைவார்கள் என கூறினார்கள். இன்று மாணவர்களின் கல்வி மலடாகியுள்ளது. நாம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அளவிற்கு தோல்வியடைந்துள்ளோம்.
எனினும் நாட்டை கட்டியெழுப்பும் சக்தி எம்மிடம் மட்டுமே உள்ளது என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.