இலங்கையில் இனி தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும்
தொடர்ச்சியான இரண்டு வார பயணக்கட்டுப்பாட்டினால் நாட்டில் கோவிட் 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைவடையும் சாத்தியம் உள்ளது என இலங்கை வைத்தியர் சங்கத்தின் தலைவர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றம் கண்டுள்ளது. அதனை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். எனினும் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது சுகாதார தரப்பினர் எடுத்துள்ள நடவடிக்கைகள் சிறந்த ஒன்றாகும்.
இப்போது தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் நிச்சயமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும். எனவே இரண்டு வாரங்களின் பின்னர் எடுக்கும் தரவுகளை பார்க்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
எனவே அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களை வரவேற்க வேண்டும். அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிப்பதை வரவேற்பதை போன்றே மக்களும் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டும்.
தற்போதுள்ள அச்சுறுத்தல் சூழலில் மக்கள் முடிந்தவரை வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருப்பதுடன் சுகாதார வழிமுறைகளை வீடுகளிலும் பின்பற்றி எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். மக்களின் பாதுகாப்பை மக்களே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம்.
ஒரு சில சந்தர்ப்பங்களில் மக்கள் சகல அச்சுறுத்தல்களையும் மறந்து அலட்சியமாக நடந்து கொள்கின்றனர். இதனை தவிர்க்க வேண்டும். பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த இரு வர காலங்களில் பெறப்படும் தரவுகளை கொண்டு அடுத்ததாக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய முடியும் என குறிப்பிட்டுள்ளார்.