அடுத்த 36 மணிநேரத்தில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
அடுத்த 36 மணி நேரத்திற்கான வானிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
அதன்படி, நாளை மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

பிற்பகல் 1.00 மணிக்கு மேல் ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
மத்திய மலை பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு சுமார் 30-40 மைல் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்துகின்றது.