நீராடச் சென்ற பாடசாலை மாணவன் மாயம்! தொடரும் தேடுதல் நடவடிக்கை
நுவரெலியா- லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்ட ஆற்றுப் பகுதியில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்களில் ஒருவர் ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாயமான மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10-ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தேடுதல் நடவடிக்கை
தற்போது பாடசாலைகளில் நடைபெற்று வரும் இரண்டாம் தவணைப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த குறித்த மாணவன், இன்று பரீட்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து வோல்ட்றீம் தோட்டத்திலுள்ள ஆற்றுப் பகுதிக்குச் சென்று விளையாடியதாகவும், பின்னர் நீராடச் சென்றபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மாணவருடன் மொத்தம் பத்து மாணவர்கள் ஆற்றுப் பகுதிக்கு சென்றிருந்ததாகவும், அவர்களில் குறித்த மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் லிந்துலை பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
தொடர்ந்து சுழியோடிகளின் உதவியுடன் ஆற்றில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.