புதிய அரசியலமைப்புச் சட்டம் இந்த ஆண்டுக்குள்
நாட்டுக்கு பொறுத்தமான அரசியலமைப்புச் சட்டம் இந்த ஆண்டு முன்வைக்கப்படும் எனவும் இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சௌபாக்கிய நோக்கு கொள்கையின் ஒரு இலக்கு எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (G.L.Peiris) தெரிவித்துள்ளார்.
அஸ்கிரிய மாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் மற்றும் ஆவண காப்பாளர் மெதகம தம்மானந்த தேரர் ஆகியோரை நேற்று சந்தித்த பின்னர் கண்டியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு அடிப்படை வரைவை ஏற்கனவே உருவாக்கியுள்ளது.
விருப்பு வாக்கு அடிப்படையிலான தேர்தல் முறை மோசடியான நிலைமைக்கு வந்துள்ளதால், தேர்தல் முறையில் மாற்றம் செய்வது புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதான இலக்கு.
அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்டுள்ளது.
அந்த தெரிவுக்குழுவின் அறிக்கை வரைவு யோசனையாக நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்பிக்கப்படும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.