அரசாங்கத்திற்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை
கோவிட்டினால் பாதிக்கப்பட்ட சிவப்பு வலயங்களை துல்லியமாகக் கண்டுபிடிப்பதற்கு அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் உடனடி கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் வலய முடக்கல்களை தாமதமின்றி விதிக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி ஷெனல் பெர்னாண்டோ இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். தற்போது பல்வேறு வகையான வைரஸ் வகைகள் உலகில் வேகமாக பரவி வருகின்றன.
அண்டை நாடான இந்தியா ஏற்கனவே அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. புத்தாண்டு பருவத்தில் மக்களின் கவனக்குறைவான நடத்தை காரணமாக உலகளாவிய தொற்றுநோய் எந்த நேரத்திலும் இலங்கையை பாதிக்கலாம். இதன் காரணமாக, மொத்த தினசரி எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் கண்காணிப்பு பொறிமுறையை வலுப்படுத்துதல், நோயாளிகளை அடையாளம்
காண்பது மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற மூன்று உத்திகளை
அறிமுகப்படுத்தவேண்டும்.
அத்துடன் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்தொடர்பு மூலம் தொற்றுநோய்க்கான
ஆபத்து குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வைத்திய
கலாநிதி பெர்னாண்டோ மேலும் கூறியுள்ளார்.