சிறுவர் இல்லத்தில் இருந்து மாயமான சிறுமிகள்! பொலிஸார் வலை வீச்சு
வத்தேகம – மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சிறுமிகள் சிறுவர் இல்லத்திற்கு அருகிலுள்ள பாடசாலைக்கு கல்வி நோக்கத்திற்காக அனுப்பிய போது, கடந்த 6ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தப்பியோடியவர்களில் ஒருவர் நாவலப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வருமாறு பாதுகாவலருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏனைய நான்கு சிறுமிகளும் 16-18 வயதுடையவர்கள் எனவும்,இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மதியம் வரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமிகள் புஸ்ஸல்லாவ, உடிஸ்பத்துவ, ஹன்டெஸ்ஸ மற்றும் வத்தேகம பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும், இவர்களை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.