வவுனியா நகரில் நீதி கோரி மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஸ்ரீநகர் மக்கள்
வவுனியா பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஸ்ரீநகர் சனசமூக நிலையம் முன்பாக 70 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்கள் தமக்கான பதில் என்ன என்பதை வலியுறுத்தி இன்றைய தினம் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியவாறு வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதி முன்றலில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நாங்கள் மனிதர்கள் இல்லையா?, எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லையா?, ஸ்ரீநகர் மக்களுக்கான காணி உறுதிப் பத்திரத்தினை வழங்கு, வீடற்றவர்களுக்கு வீடு வழங்கு, எமது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு என்ன?, இளைஞர்கள் விளையாடுவதற்கான மைதானத்தினை தந்து உதவு, பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு பொதுநோக்கு மண்டபம் அமைத்து கொடு போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஸ்ரீநகர் பகுதியினை சேர்ந்த மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், ஸ்ரீநகர் சிறி சனசமூக நிலையத்தினர் போராட்டத்திற்கு தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.