விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாததால் ஊடகங்களை அடக்க முனையும் அரசாங்கம்
அரசாங்கத்தை விமர்சிப்பது மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவதை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தினால், சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களை அடக்க அரசாங்கம் தயாராகி வருகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்குள் நடக்கும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் மாத்திரமல்ல, அரசாங்கம் ஒன்று செயற்படும் விதத்திலும் குறைகளை உணர முடிகின்றது.
மக்கள் எதிர்பார்க்காத விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது விமர்சனங்கள் எழுவது சாதாரணமானது.
பொலிஸ், குற்றவியல் விசாரணை திணைக்களம்ஆகியவற்றை பயன்படுத்தியும் வேறு விதமாக அடக்குமுறையை முன்னெடுக்க குழுக்களை பயன்படுத்தியும் ஊடக அடக்குமுறையை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
இதன் மூலம் அரசாங்கம் செல்வது ஜனநாயக பயணம் அல்ல என்பதை காணக் கூடியதாக உள்ளது.
இதனால், சமூக ஊடகங்கள் உட்பட ஊடக தணிக்கைக்காக எடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்தை கோருவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.