அரசாங்கம் பிரதான பிரச்சினை ஒன்றை எதிர்நோக்கி வருகிறது - கெஹெலிய ரம்புக்வெல்ல
அரசாங்கம் எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைக்கு தீர்வாகவே கொழும்பு துறைமுக நகருக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்க முயற்சித்து வருவதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தேசிய அபிவிருத்தி மத்திய நிலையத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் நீதிமன்றத்தை மீறி நாங்கள் செயற்படவில்லை. எந்த வகையிலும் இல்லை. கூறும் விடயங்கள் 200 வீதம் பொய்யானவை. துறைமுக நகர விசேட ஆணைக்குழு சட்டமூலம் அடிப்படையான அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையது என சட்டமா அதிபர் கூறியுள்ளதுடன் அதிகாரபூர்வமாக அரசாஙகத்திற்கும் அறிவித்துள்ளார்.
இதன் பின்னரே நாங்கள் அதனை முன்னெடுத்துச் சென்றோம். எமக்கு ஒரு பிரச்சினையுள்ளது. அதுதான் அந்நிய செலாவணி பிரச்சினை. டொலர் பிரச்சினை. இந்த பிரதான பிரச்சினையை தீர்க்கவே நாங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைக்கின்றோம்.
இதனை தடுத்து, மக்கள் மீது சுமையை ஏற்றி, மிகவும் மோசமான யுகத்தை ஏற்படுத்தவும் அதன் மூலம் திருப்தியடையும் சிலர் முயற்சிப்பதாகவே நான் காண்கின்றேன் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.