அரசாங்கம் எந்த வேலைகளையும் செய்யவில்லை: கெப்பிட்டியாகொட சிறிவிமல தேரர்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களிடம் கோரிய அனைத்து அதிகாரங்களையும் மக்கள் வழங்கிய போதிலும் வழங்கிய வாக்குறுதிகளின்படி எந்த வேலைகளையும் அரசாங்கம் செய்யவில்லை என கண்டி, கெட்டம்பே விகாராதிபதி கெப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று தேரரை சந்தித்த போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது இழுபறிபடுகின்றனர்.
போதுமான அளவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 19ஆவது திருத்தச் சட்டத்தால் முடியாது, 20ஆவது திருத்தச் சட்டம் வேண்டும் என்றனர்.
அதனையும் கொடுத்தனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்றனர். அதனையும் கொடுத்தனர். மேலும் எதனை வழங்க வேண்டும்.
மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதை எண்ணிக் கூட பார்க்க முடியாது. அதிகாரத்தை பெற்றுக் கொடுத்தால், அதனை வைத்து வேலை செய்ய வேண்டும்.
தமது பைகளை நிரப்பிக் கொள்ளும் தேவை இவர்களுக்கு இருக்கின்றது எனவும் சிறிவிமல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
