தடுப்பூசி வழங்குவதில் அரசாங்கம் முற்றாக தோல்வியடைந்துள்ளது - சரத் பொன்சேகா
கோவிட் தொற்று நோய் தடுப்பு மற்றும் கோவிட் நோய் எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் முற்றாக தோல்வியடைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தடுப்பூ வழங்கும் போது முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய நபர்களுக்கு பதிலாக, அரசியல் பலம், பணப் பலம் ஆகியவற்றின் அடிப்படையில், தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
பொலிஸ் தலைமையகத்தின் ஊடாக கொழும்பில் தடுப்பூசி வழங்கப்படும் நிலையத்தில் தினமு் இப்படியான சுமார் 300 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
கோவிட் வைரஸ் மோசமாக பரவிய அமெரிக்காவில் அந்நாட்டு சனத் தொகையில் தற்போது 55 வீதமான மக்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 10 வீதமான மக்களுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்குவதில் உலகில் முன்னிலையில் இருப்பதாக கூறும் இலங்கையில் இதுவரை 10 வீதமானவர்களுக்கு கூட இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கி முடிக்கவில்லை.
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் கூட அரசியல் பலமிக்க நபர்களுக்கு விசேட கவனிப்புகள் வழங்கப்படுகின்றன.
கடந்த காலத்தில் வயது முதிர்ந்த வண்டின் செயற்பாடுகள் குறித்து முழு நாடும் அறிந்துக்கொண்டது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.