கோவிட் தொற்றை எதிர்த்து போராடுவதில் தோல்வியடைந்துள்ள அரசாங்கம் - ஜே.வி.பி
கோவிட் தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கான அரசியல் தலைமைத்துவமும் பொறிமுறையும் முற்றிலும் தோல்வியுற்றுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கோவிட் பணிக்குழு மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
தொற்று நோயை ஒரு சுகாதாரப் பிரச்சினையாகக் கருதி, சுகாதாரத் துறைக்கு பரிந்துரைகள், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல் தொடர்பாக பொறிமுறையினுள் அதிக அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க செய்தியாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தாம் குறிப்பாக யாரையும் புகழ்ந்து பேசவோ அவமானப்படுத்தவோ இல்லை. இருப்பினும், சுகாதார சேவைகள் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, தலைமையில் தொற்றுநோயியல் நிபுணர் பபா பலிஹவர்தன மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைத்திய கலாநிதி ஜெயருவன் பண்டார ஆகியோரை கோவிட் பணிக்குழுவில் திரும்ப இணைக்க வேண்டும்.
இந்த குழுவினர் முதல் கோவிட் அலையின் போது தொற்றுநோயைத் தடுப்பதில் ஒரு மகத்தான சேவையை வழங்கினர் என அனுரகுமார தெரிவித்தார்.
எந்தவொரு பேரழிவையும் போலவே, இந்த தொற்று நோயின் போது ஒரு வலுவான அரசியல் தலைமை இருக்க வேண்டும் என்றும், அது ஒரு கூட்டு அரசியல் தலைமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டில் தற்போது முழு பொறிமுறையும் ஒற்றை அரசியல் சக்தியின் கீழ் கையாளப்படுகிறது. அதேசமயம், அது ஒரு கூட்டு அரசியல் சக்தியின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.
ஆரம்பத்தில், எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் ஒரு பொறிமுறையை அமைக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்பட்டது. அரசாங்கத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் துணைத் தலைவராக இருந்தவர்கள், ஆலோசகர் மற்றும் அரசாங்கத்திற்குள் உள்ள சிறப்பு மருத்துவர்கள் ஆகியோர் குறுகிய கால முடிவுகளை எடுக்க இதுபோன்ற பொறிமுறையைப் பயன்படுத்த முடியும் என்றும் அனுரகுமார தெரிவித்தார்.