ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக பிரேரணைகள் நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கு வழங்கிய கால அவகாசத்தை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவில்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக பிரேரணைகளை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புக்களே அதிகமுள்ளன. இது நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கோரி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சர்வதேசத்தை நாடுவதற்கு எடுத்துள்ள தீர்மானம் எவ்விதத்திலும் தவறாகாது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது ஏற்பட்ட நம்பிக்கையின்மையின் காரணமாகவே இந்த தீரமானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு கால அவகாசத்தை வழங்கியது.
எனினும் அரசாங்கம் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. இதனால் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னரைப் போன்று இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக பிரேரணைகளை நிறைவேற்றக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. இது நாட்டின் எதிர்காலத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.