சுதந்திரக் கட்சி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கின்றது
சேதனப் பசளை தொடர்பான பிரச்சினையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்ற காரியத்தை செய்து வருகிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் (Sagara Kariyavasam) தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இணங்கவில்லை என்றால் விலகிக்கொள்ள வேண்டும். அனைத்தையும் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தை அந்த கட்சி விமர்சிக்குமாயின் புத்திசாலியான மக்களுக்கு எண்ணிப்பார்க்க வேண்டிய ஒன்று இருக்கின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இருக்குமாயின் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அந்த கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக பேசுவார்கள் என்றால், கூட்டணியில் இருக்கக் கூடாது.
இந்த சந்தர்ப்பத்தில் சுதந்திரக் கட்சி குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்ற காரியத்தை செய்து வருகிறது.
சேதனப் பசளை திட்டம் வெற்றி பெற்றிருந்தால், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் வெளியில் இரறங்கி, நானே இதனை ஆரம்பித்தேன், எனது காலத்திலேயே இதற்கான அடித்தளம் இடப்பட்டது, இதனால் அதன் கௌரவம் தனக்கே கிடைக்க வேண்டும் எனக் கூறியிருப்பார் எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.