ஊடகவியலாளர்களை கண்டு ஒளிந்து ஓடிய இராஜாங்க அமைச்சர்
மட்டக்களப்பில் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஊடகவியலாளர்களை கண்டு ஒளிந்து ஓடிய சம்பவமொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பா.சந்திரகுமாரின் அலுலகத்தில் இன்றைய தினம் பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்தே,எஸ்.வியாழேந்திரன் மற்றும் திருகோணமலை மற்றும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே ஊடகவியலாளர்களை கண்டு ஒளிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மட்டக்களப்பில் சுகாதார துறையினர் கோவிட் பரவலை தடுப்பதற்கு போராடிவரும் நிலையில் பெருமளவானோரின் பங்கு பற்றுதலுடன் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,குறித்த நிகழ்வில் கலந்துக்கொள்ள ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.