2026 FIFA உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை
தமிழர் வம்சாவழியை சேர்ந்த மெல்போர்ன் விக்டரி அணியின் விங்கர் நிஷான் வேலுப்பிள்ளை, 2026 FIFA உலகக் கோப்பைக்கான அவுஸ்திரேலியாவின் 26 பேர் கொண்ட இறுதி அணியில் இடம்பிடித்துள்ளார்.
இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழர் வம்சாவழியைர்ந்த வீரர் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.
தமிழ் வீரர்
25 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, திங்கட்கிழமை அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் டோனி போபோவிச் அறிவித்த இறுதி அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
வட அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 உலகக் கோப்பையில் அவுஸ்திரேலியா, டி குழுவில் துருக்கி, அமெரிக்கா மற்றும் பராகுவே அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்திரேலியாவின் முதல் போட்டி ஜூன் 13ஆம் திகதி BC Place BC Place மைதானத்தில் துருக்கிக்கு எதிராக நடைபெறுகிறது.
நிஷானின் தந்தை சசிநாத் வேலுப்பிள்ளை தமிழர் மரபைச் சேர்ந்தவர். அவரது தாய் கில்லியன் வேலுப்பிள்ளை ஆங்கிலோ-இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்.
மெல்போர்னில் பிறந்து வளர்ந்த நிஷான், Mazenod College பள்ளியில் கல்வி கற்றதுடன், பின்னர் Glen Eira FC இன் இளையோர் அணியில் விளையாடி, அதன்பின் Melbourne Victory மெல்போர்ன் விக்டரி அகாடமியில் இணைந்தார்.
அவுஸ்திரேலிய தேசிய அணி
2024 ஆம் ஆண்டு ஓக்டோபரில், சீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிக்காக அவர் முதல் முறையாக அவுஸ்திரேலிய தேசிய அணிக்கு அழைக்கப்பட்டார்.
போட்டியின் 83ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய அவர், ஏழு நிமிடங்களுக்குப் பின்னர் கோல் அடித்து அவுஸ்திரேலியாவின் 3-1 வெற்றியை உறுதிப்படுத்தினார். அந்த அறிமுகப் போட்டியே அவரை அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும் உலகத் தமிழர் சமூகத்திற்கும் அறிமுகப்படுத்தியது.

இதுவரை அவுஸ்திரேலிய தேசிய அணிக்காக ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள நிஷான், மூன்று கோல்களைப் பதிவு செய்துள்ளார். அந்த மூன்று கோல்களும் உலகக் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகளிலேயே வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Melbourne Victory மெல்போர்ன் விக்டரியின் கால்பந்தாட்ட இயக்குநரான John Didulica ஜான் டிடுலிகா, நிஷானின் சாதனையைப் பாராட்டியுள்ளார்.
“இளம் வீரராக இந்தக் கழகத்துக்குள் வந்த நாளிலிருந்து இந்த நிலையை அடைவதற்காக நிஷான் கடுமையாக உழைத்துள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் 26 பேர் கொண்ட உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள 17 வீரர்கள் முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளனர்.
அவர்களில் நிஷானும் ஒருவர். மேலும், நான்காவது உலகக் கோப்பையில் விளையாடவுள்ள Mathew Leckie மேத்யூ லெக்கி உள்ளிட்ட பலரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
2026 FIFA உலகக் கோப்பை
தமிழீழ தேசிய கால்பந்தாட்ட அணி, FIFA அங்கீகாரம் பெறாத நாடுகள் மற்றும் மக்களின் கால்பந்தாட்ட அமைப்பான CONIFA CONIFA-வின் கீழ் போட்டியிடுகிறது.
தமிழீழ அணி 2023 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் CONIFA ஆசியக் கிண்ணத்தை வென்றிருந்தாலும், தற்போதைய சர்வதேச கால்பந்தாட்ட அமைப்பின் கீழ் FIFA உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் வாய்ப்பு இல்லை.

இதனால், நிஷான் வேலுப்பிள்ளையின் உலகக் கோப்பைத் தேர்வு உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர் புலம்பெயர் சமூகத்திற்கு ஒரு முக்கியமான வரலாற்று தருணமாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, இலங்கையின் நீண்டகால உள்நாட்டு போரின் பின்னர் அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகளில் குடியேறிய தமிழர்களுக்கு இது பெருமை சேர்க்கும் சாதனையாக பார்க்கப்படுகிறது.
2026 FIFA உலகக் கோப்பையில் அவுஸ்திரேலியாவின் பயணம் ஜூன் 13ஆம் திகதி துருக்கிக்கு எதிரான போட்டியுடன் ஆரம்பமாகிறது.