புதிய பிரதமரின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு - உறுப்பினர்களுக்கு தீவிர பாதுகாப்பு
ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக நாடாளுமன்றத்தை நாளை கூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிலையான அரசாங்கத்தை தக்கவைக்க நாடாளுமன்றத்தில் நாளை பெரும்பான்மையை காட்ட வேண்டிய அவசியமும் உள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கருதி நாடாளுமன்றத்தை சூழவுள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப்பகுதியில் பாதுகாப்பு இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரி நரேந்திர பெர்னாண்டோ தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன் அதில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டன.
அதற்கமைய, நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்காக பொலிஸாருக்கு மேலதிகமாக முப்படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளதுடன், புலனாய்வுப் பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தியவன்னா ஓயவில் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவும் நேற்று நாடாளுமன்ற வளாகத்திற்கு விஜயம் செய்து பாதுகாப்பு நிலைமைகளை பார்வையிட்டதுடன் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பிலான பணிப்புரைகளையும் வழங்கியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் நாளை முதல் 4 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த நான்கு நாட்களிலும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்க பாதுகாப்புப் படையினர் தயாராக உள்ளனர்.
வாரத்தின் முற்பகுதியில், நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கும் நாளில் போராட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் உட்பட பல தரப்பினரின் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.