மகனுக்கு போதைப்பொருள் வழங்க முற்பட்ட தந்தை கைது!
வவுனியா, பூந்தோட்டம் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வரும் தனது மகனுக்கு ஹெரோயின் போதைப் பொருள் வழங்க முற்பட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் பாவனை
இன்று (09.03) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, போதைப் பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய இளைஞர் ஒருவர் வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தற்கு 6 மாத புனர்வாழ்வுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது 4 மாதங்கள் நிறைவடையில் நிலையில் குறித்த இளைஞரை பார்வையிடுவதற்காக குருநாகல் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் குற்றத்தடுப்பு பிரிவில் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றும் தந்தையும், பொலிசாராக கடமையாற்றும் தாயும் வருகை தந்துள்ளனர்.
புனர்வாழ்வு நிலையத்திறகுள் சென்று தமது மகனை பார்வையிட்ட போது அவர்கள் இருந்த இடத்தை நோக்கி பொலிஸ் மேப்ப நாய் வந்ததை அவதானித்த அவர்கள் தமது பையில் இருந்த பொதி ஒன்றை எடுத்து வெளியே வீசியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனை காவல் கடமையில் இருந்த பாதுகாப்பு தரப்பினர் அவதானித்துள்ளனர்.
உடனடியாக மோப்ப நாயின் உதவியுடன் அதனை சோதனையிட்ட போது அதில் 240 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த மோப்ப நாய் அதனை வீசிய இளைஞரின் தந்தையான உப பொலிஸ் பரிசோதகரையும் அடையாளம் காட்டிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலதிக விசாரணைகளின் பின் குறித்த உப பொலிஸ் பரிசோதகரை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
