கடற்றொழிலாளர்களின் பொருளாதார சுமை: டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த தீர்வு(Photo)
கடற்றொழிலாளர்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில், விரைவில் இந்தியாவில் இருந்து யாழ் காங்கேசன்துறை கப்பல் சேவை ஊடாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மன்னாரில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானதாவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று(17) காலை மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
விசேட சந்திப்பு
இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கிராமிய ரீதியாக உள்ள மீன்பிடி சங்கங்களை மீள் அமைப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதார மேம்பாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும், கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்வதற்கும் இந்த விசேட கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, மன்னார் கடற்றொழிலாளர்கள் பெரும்பாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள்
மேலும், கடற்றொழிலாளர்களுக்கும் மீனவர் சங்கங்களுக்கும் விசேட அடிப்படையில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரம் கச்சதீவை இந்தியாவிற்கு வழங்க கூடாது எனவும் இந்திய மீனவர்களின் வருகை அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாகவும் அதையும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்போது, கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரைவில் காத்திரமான முடிவுகளை பெற்றுத் தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்
பணிப்பாளர்,மாவட்ட மீனவ சம்மேள பிரதிநிதிகள் மற்றும் கிராம ரீதியான மீனவ சங்க
பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.