கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் பிரதமர் தெரிவித்துள்ள விடயம்
அரசின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கக்கூடாது என்ற கொள்கைகளுக்கமைய கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டிடமும் கையளிக்கமாட்டோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச துறைமுகத் தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் நூறு வீதம் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்றும் அவர் மேலும் வாக்குறுதி அளித்துள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை வெளிநாட்டுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்கின்றது எனத் தெரிவித்து கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில், அலரி மாளிகையில் இன்று காலை கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கும் தொழிற்சங்கத்தினருக்கும், பிரதமருக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, உள்ளூர் வளங்களை விற்பனை செய்வதை தவிர்க்கும் தற்போதைய அரசின் கொள்கையின் கீழ் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை எந்தவொரு நாட்டுக்கும் விற்பனை செய்யவோ அல்லது கட்டுப்பாடு வழங்கப்படவோ மாட்டாது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அது 100 வீதம் துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படும் நிறுவனமாகத் தொடர்ந்தும் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதனுடன் தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரத்தைச் சம்பந்தப்பட்ட துறைக்குப்பொறுப்பான அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இன்று பிற்பகல் அமைச்சரவையில் சமர்ப்பிப்பார் எனவும், இதனால் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியம் இருக்காதெனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த கருத்துக்களுக்குக் கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கும் தொழிற்சங்கத்தினர் உடன்பாடு தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை நாளை முதல் கைவிடுவதற்கும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
எனினும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் அந்நியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பதை உறுதியளித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை வழங்குமாறு குறித்த கலந்துரையாடலின்போது தொழிற்சங்கத் தலைவர்கள் பிரதமரிடம் கோரியுள்ளனர்.
ஆனால், தனது 50 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றில் தொழிற்சங்கங்களால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பலவற்றைத் தாம் தீர்த்துள்ள போதிலும், அதுகுறித்து எழுத்து மூலமான ஆவணமொன்றை இதுவரை வழங்கியதில்லை என்றும், தாம் வாக்குறுதியளித்தால் அது அவ்வாறே நிறைவேற்றப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
"பிரதமர் என்ற வகையில் நான் முன்னெடுக்கும் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை அவ்வாறே செயற்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். நான் மேற்கொள்ளும் தீர்மானங்கள் கலந்துரையாடல்களுடன் மட்டுப்படாது அவை செயற்படுத்தப்படும்" என்றும் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
