சிதையும் கோட்டாபயவின் கனவு! திணறும் இலங்கை (Video)

Mahinda Rajapaksha Basil Rajapaksha Gotabhaya Rajapaksha
By Benat Nov 24, 2021 08:50 AM GMT
Report

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்(Gotabhaya Rajapaksha) தலைமையில் ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற்று கடந்த 18ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்ற கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் மன்னராட்சி காலத்தில் தலைநகராக விளங்கிய அநுராதபுரத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த பதவியேற்பு வரலாற்று முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

ருவன்வெலி மகா சாய பௌத்தர்களின் சின்னமாக விளங்குவது மற்றும் சிங்கள மன்னர்களால் அநுராதபுர யுகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியாக வரலாற்றில் குறிக்கப்படுவது ஆகிய காரணங்களே தமது பதவிப் பிரமாண நிகழ்வுக்கு இந்த இடத்தை கோட்டாபய தேர்ந்தெடுத்ததற்கு காரணம் என்று கருதப்படுகிறது.

அநுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னர்கள் மிக பழைமை வாய்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளதால், ருவன்வெலி மகா சாயவிலிருந்து பதவி பிரமாணம் செய்வது மிக சிறந்த ஆட்சி முறையை ஏற்படுத்தும் என்ற எண்ணத்திலேயே அங்கு பதவி பிரமாண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

வரலாற்றில், அநுராதபுரத்தை ஆண்ட எல்லாளன் எனும் தமிழ் மன்னனை துட்டகைமுனு என்ற சிங்கள அரசன் தோற்கடித்த இடமும் அநுராதபுரமாகும்.


இந்த மன்னனை, சிங்கள அரசனாகவும் மாபெரும் வீரனாகவும், இலங்கை முழுதும் பௌத்தம் பரவுவதற்கு காரணமானவனாகவும் மகாவம்சம்   போற்றி புகழ்கிறது.

எனவே இந்த அநுராதபுரம் என்பது சிங்களவர்களை பொறுத்தமட்டில் அவர்களது வீரத்தை எடுத்துக்காட்டும் ஒரு இடமாக பார்க்கப்படுகின்றது.

குறித்த இடத்தில் கோட்டாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டமை தம்மை நவீன துட்டகைமுனுவாக மக்கள் மத்தில் காட்டிக் கொண்டதோடு, புதிய புரட்சியை நோக்கி செல்வதாகவும் பொதுமக்களிடத்தில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் இடம்பெற்ற, நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் மத்தியிலிருந்த வேறுபாடுகள், இலங்கையின் தேசிய பாதுகாப்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பின்மை போன்றவை கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு வித்திட்டது என்பது யாவரும் அறிந்த ஒன்று.

நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்வியில் தலைவர்களுக்கிடையில் இருந்த முரண்பாடும், அதனை வெட்டவெளிச்சமாக அவர்கள் வெளிப்படுத்திய விதமும் பெரும் செல்வாக்கு செலுத்தியது.

அதே போன்றதொரு சூழ்நிலை தற்போது ஏற்பட்டுவருகின்றதோ என்ற எண்ணம் பலரிடத்தில் தோற்றம் பெற்றுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான குழுவினர் ஆட்சிப் பொறுப்பேற்றதன் பின்னரும், அதன் பிறகு இடம்பெற்ற பொதுத் தேர்தலிலும், கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக அளிக்கப்பட்ட வாக்குகள் என்பதைத் தாண்டி நல்லாட்சி அரசாங்கத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடுகளாக இந்த ஆட்சி மாற்றம் காணப்பட்டது.

அதேபோன்றதொரு அதிருப்தி நிலை தற்போது மக்களிடத்திலும் சரி, உள்ளக அரசியல் மட்டத்திலும் சரி வலுப்பெற்று வருகின்றது.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சர்கள் மீது காணப்பட்ட மிகப் பெரிய நம்பிக்கை உடைந்து விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டன, ஆட்சி மாற்றத்தை வரவேற்ற இளைஞர்கள் நாடு பூராகவும் ஓவியம் வரைந்து அழகுபடுத்தி, பல செயற்பாடுகளை முன்னெடுத்து கோட்டாபயவை வரவேற்றனர் எனலாம்.

ஆனால் அதே அளவான இளைஞர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறிச் செல்வதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றமை கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் விழுந்த மிகப் பெரிய கருப்புப் புள்ளி.

இலங்கையில் சராசரியாக நான்கு பேரில் ஒருவர், சந்தர்ப்பம் கிடைக்குமாயின் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர், வெளிநாடு செல்லும் நோக்குடன் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்ளக் காத்திருப்பது தொடர்பில் தினமும் செய்திகளின் வெளியாகின்றன.

இந்த ஆய்வின் முடிவுகள் அச்சமூட்டுவதுடன், படித்த இளைஞர்கள் மத்தியில் நாட்டை விட்டு வெளியேறும் விருப்பம் 50% ஆல் உயர்வடைந்துள்ளது.

அறிக்கைக்கு அமைய, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 34 வீதமான ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முழுமையான விருப்பத்தைக் கொண்டுள்ளதோடு, அவர்களில் 24 வீதமானோர் ஏற்கனவே அதற்காக திட்டமிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

மேலும் 20 வீதமானோர் இன்னும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. நாட்டில் 22 வீதமான பெண்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றனர்.

மேலும் அவர்களில் 22 வீதமானவர்கள் இதற்காகத் திட்டமிடுவதுடன், மேலும் 12 பேர் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

கடந்த 3 - 5 வருடங்களில் இலங்கையர்கள் மத்தியில் வெளிநாடு செல்வதற்கான அபிலாஷைகள் இரட்டிப்பாகியுள்ளதாக அந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

உயர்கல்வித் தகுதி பெற்ற பலர் தற்போதைய ஆட்சியில் விரக்தியடைந்து, நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

கணக்கெடுப்பின்படி, சராசரியாக உயர்தரம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு 2.6 வீதமாக ஆக உள்ளது, அதேவேளை நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் தொகை 10.2 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.

அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்காகக் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதாக, பிரதமர் மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்த கருத்தை இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாடு செல்வதில் இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டுவதாகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்து சரியானது எனக் கணக்கெடுப்பு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறுவதற்குப் பொருளாதாரத்தின் மீதான அவநம்பிக்கையான பார்வை, கோவிட்-19 ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை மீதுள்ள அதிருப்தி, விரக்தி என்பவற்றை முக்கிய ஆதாரங்களாக ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், ஒரு வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடையும் என எதிர்பார்ப்பதாகக் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.

நிலைமை இவ்வாறு செல்ல, உள்ளக அரசியலும் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவே அமைந்திருக்கின்றது. அண்மைய நாட்களாக உட்கட்சி மோதல்கள் வலுப்பெற்று வரும் நிலையில் பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கிடையிலும், கட்சியின் தலைமைக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசின் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, தயாசிறி போன்றவர்கள் பல விமர்சனங்களை தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர். அனைத்தையும்விட கடந்த காலங்களில் ராஜபக்சவினரை ஆட்சிக்கு கொண்டு வர அரும்பாடு பட்ட முக்கியஸ்தர்களுள் ஒருவரான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் அரசுக்கு எதிரான கருத்துக்களை சில நாட்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தார்.

அரசுக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்துக்களும் அரசு மீதான அவரது நம்பிக்கை அவரது ஆதரவு பிறிதொரு பக்கம் சாய்ந்து விட்டதா என கேள்வியும் எழுப்பப்பட்டது.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பசில் ராஜபக்சவும் வெவ்வேறு திசைகளில் செல்வதாகவும் இதற்கிடையில் அவர்கள் மஹிந்தவை ஓரங்கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஊடகம் ஒன்றுக்கு பகிரங்கமாக அறிவித்ததுடன் இந்த நிலை இப்படியே செல்லுமாயின் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கவும் தயங்க மாட்டோம் என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரமும் அதள பாதாளத்தில் விழுந்து அதனை கட்டியெழுப்ப மீட்பர் ஒருவர் வர மாட்டாரா என அனைவரும் சிந்திக்க தொடங்கும்போது பசில் ராஜபக்ச தனது மீள் பிரவேசத்தை ஆரம்பிக்கிறார். அதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் நிதி அமைச்சராகவும் பசில் ராஜபக்ச பதவியேற்றதோடு அவருக்கு கீழ் பல நிறுவனங்களும் பொறுப்புக்களும் கையளிக்கப்பட்டன.

இதுவரை காலமும் நிதி அமைச்சராக இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து நிதி அமைச்சும் அதன் கீழான பொறுப்புக்களும் பசிலிடம் வழங்கப்பட்டன.

அமைச்சரானதும் தனது முதலாவது ஊடக சந்திப்பில் கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிடும் என கூறி தனது முதலாவது அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார் பசில்.

இதேவேளை, இதுவரை காலமும் ராஜபக்சர்களின் தீவிர விசுவாசியாகவிருந்தவர்கள் தற்போதைய கோட்டாபய அரசுடன் முரண்படுவதும், ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிபீடமேற்ற அரும்பாடுபட்டவர்கள் தற்போது எதிராக நிற்பதும் இந்த அரசின் வீழ்ச்சிப் போக்கை எடுத்துக்காட்ட ஆரம்பித்தது.

இந்த சூழலில் பசிலின் மீள் வருகை அரசின் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்குமா இல்லை ராஜபக்ச அரசின் அஸ்தமனத்திற்கு வழிவகுக்குமா என கேள்வி பலராலும் கேள்வி எழுப்பப்பட்டு வந்தன.

அதனனைத் தொடந்து எதிர்வரும் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு அண்மையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னரான ராஜபக்ச அரசின் மீதான எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன எனலாம்.

பாதீட்டில் அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட 5200 மில்லியன் ரூபாயில் ராஜபக்சர்களின் குடும்பத்தைச் சோ்ந்த அமைச்சகங்களுக்கு மாத்திரம் 3470 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாதீட்டு ஒதுக்கீட்டில் 60 வீத ஒதுக்கீடாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் அநுரகுமார திசாநாயக்க குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.

இலங்கை அரசாங்கத்தின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடானது முழுயைாக பூச்சிய தோல்வியடைந்த பாதீடு என ஐக்கிய மக்கள் சக்தியும் விமர்சித்திருந்தது.

பாதீட்டுக்கு முன்னரும், அதன் பின்னரும் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டங்கள், அரச ஊழியர்களின் ஆர்ப்பாட்டங்கள், விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் என அனைத்தும் இந்த அரசின் மீதான நம்பிக்கை இழப்பை அப்பட்டமாக வெளி உலகுக்கு எடுத்துக் காட்டின.

அத்துடன், அரச ஊழியர்கள் தொடர்பான நிதி அமைச்சரின் கருத்துக்களும் பல சர்ச்சைகளை தோற்றுவித்திருந்த நிலையில் அரச ஊழியர்களும் அரசுக்கெதிரான மன நிலையில் தற்போது காணப்படுவதோடு, அடுத்து நடக்கப் போகும் தேர்தலில் இதன் விளைவுகளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

மேலும், அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழு நாடளாவிய ரீதியில் பேசு பொருளாக மாறியிருந்தது. பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆணைக்குழு தொடர்பில் பல கண்டனங்கள் வெளியிடப்பட்டன. ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அதன் பின்னர் நாடளாவிய ரீதியில் எதிர்க்கட்சியின் மேற்கொண்ட எதிர்ப்பு போராட்டங்களில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற  வார்த்தைக்கு பல சர்ச்சைகளை கொண்டு வந்து சேர்த்தது எனலாம்.

பொதுமக்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்புக்களை விதைத்து, தம்மை மீட்க வந்த இரட்சகன் போல, தம்மைக் காட்டிக் கொண்ட கோட்டாபய இன்று தோல்வியடைந்த அரசனாக மாறியுள்ளமை மறுக்க முடியாத ஒரு உண்மை.

துட்டகைமுனு மன்னன் போல சிங்கள மக்கள் மத்தியில் தங்களை மீட்பர்களாக காட்டிக் கொண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ராஜபக்ச தரப்புக்கள் குறுகிய இரண்டு வருட காலத்திற்குள் வாக்களிக்காத மக்களிடம் மட்டுமன்றி வாக்களித்த 69 லட்சம் மக்களிடத்திலும் தோல்வியை தழுவியிருக்கின்றார்கள் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. 

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US