முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்கள் தமது தொழிலை சுதந்திரமாக செய்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும் என குறித்த கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் தற்போது இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் மற்றும் வெளிமாவட்ட கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் அதிகளவில் காணப்படுகின்றமையால் அப்பகுதி மக்கள் பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கடற்தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கையில், “எமது வாழ்வாதாரத் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.
மக்களின் கோரிக்கைகள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முகத்துவாரம் நல்ல தண்ணித்தொடுவாய் முதல் பேய்ப்பாறைப்பிட்டி வரைக்குமான 74 கிலோ மீட்டர் நீளமான கரையோரப்பகுதிகளிலும் ஆழ்கடல் பகுதிகளிலும் தமது வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொள்ளும் வகையில் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றோம்.
இந்த நிலையில் எமது பகுதிகளில் தடைசெய்யப்பட்ட மற்றும் அனுமதிகளை மீறிய தொழில்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடற்தொழிலாளர்களின் நெருக்கடி நிலை
இதனால் எமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன, கடற்தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட ஏராளமான குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்கே பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலைமை காணப்படுகின்றது.
இதற்கமைய நிபந்தனைகளை மீறிய அட்டைத்தொழில், வெளிச்சம் பாச்சி மீன் பிடித்தல், கரைவலைப்பாடுகளில் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுதல் மற்றும் சிறுகடல் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொள்ளுதல் என்பன பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
கடற்தொழில்களை விடுத்து தற்போது கூலி வேலைகளுக்கே
செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது”என்று விசனம் தெரிவித்துள்ளனர்.