வெற்றியுடன் நடந்தேறிய கையெழுத்து போராட்டத்தின் இறுதி நிகழ்வு (Photos)
பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழி போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
இறுதி நாள் நிகழ்வு
இந்தநிலையில் அதன் இறுதி நாள் நிகழ்வு மூவின சமூகத்தினரின் பேராதரவுடன் நேற்று (02.10.2022) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலையில் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், சர்வமதத் தலைவர்கள், மூவின மக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
கையெழுத்து சேகரிக்கும் ஊர்தி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் காங்கேசன்துறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான போராட்டத்தை காங்கேசன்துறை - மாவட்டபுரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆரம்பித்து வைத்தார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 10ஆம் திகதி காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட
கையெழுத்து சேகரிக்கும் ஊர்தி இலங்கையின் 25 மாவட்டங்களிலும் மக்களின்
கையெழுத்துக்களை சேகரித்த பின்னர் நேற்று (02.10.2022) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின்
தங்காலையில் தனது செயற்பாட்டை வெற்றிகரமாக
பூர்த்தி செய்துள்ளது.







