சிறுமி விவகாரத்தில் நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய சிறைத்தண்டனையை அதிகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்
திருகோணமலை - நிலாவெளி 6ஆம் கட்டையில் மத நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படும் சிறுவர் இல்லத்தில் இருந்த 18 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுவர் இல்ல காப்பாளர் மற்றும் பணியாளர் இருவருக்கு எதிராக திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர்கள் இருவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு 2019ஆம் ஆண்டு நீதிபதி இளஞ்செழியன் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குற்றவாளிகளுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா 5000 ரூபா தண்டப்பணமும் அதனை கட்டத்தவறும் பட்சத்தில் ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டனையும், தலா ஐந்து இலட்சம் ரூபாய் நஷ்டஈடும் அதனை கட்டத் தவறும் பட்சத்தில் 2 ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பிற்கு எதிரான மேன்முறையீடு
குறித்த தீர்ப்பிற்கு எதிராக இருவரும் மேன்முறையீடு செய்து சிறைத்தண்டனை தீர்ப்பை இரத்து செய்யுமாறும் குற்றவாளி தீர்ப்பை இரத்து செய்யுமாறும் மேன்முறையீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.
அதில் ஒரு குற்றவாளி சிறைச்சாலையில் வைத்து மரணமடைந்துள்ளார். இந்த நிலையில் நீதிபதி இளஞ்செழியனால் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சரியானது என உறுதிப்படுத்தப்பட்டு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எனினும் நீதிபதி இளஞ்செழியனால் வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை போதாது என சட்டவாதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பணம் செய்து சிறைத்தண்டனை காலத்தை அதிகரிக்க வேண்டும் என விண்ணப்பம் செய்திருந்தார்.
அதிகரிக்கப்பட்ட சிறைத்தண்டனை
இதனை தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், பாதுகாப்பு தேடி சிறுவர் இல்லத்திற்கு சென்ற சிறுமி மீது சிறுவர் இல்ல காப்பாளர் மற்றும் பணியாளர் பாலியல் வல்லுறவு புரிந்ததை சுட்டிக்காட்டி கடுமையான விமர்சனத்தை வெளியிட்டு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய பத்து ஆண்டு தீர்ப்பு போதாது என தெரிவித்து 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
அத்துடன் நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தண்டப்பணம் மற்றும் நஷ்ட ஈட்டு தொகையை மாற்றமின்றி நடைமுறைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.