அடுத்த வருடத்துக்குள் முடிவு! இராணுவத்தளபதி நம்பிக்கை
2022ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் அனைத்து மக்களையும் கோவிட் வைரஸ் பரவல் நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதற்கு எதிர்பார்க்கின்றோம் என இராணுவத் தளபதியும் கோவிட் கட்டுப்பாடு மற்றும் ஒழிப்பு தொடர்பான தேசிய மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை வர்த்தக பேரவை மற்றும் கொழும்பு பங்குச்சந்தை ஆகியவற்றின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இலங்கை முதலீட்டுப் பேரவை மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரையாற்றியபோதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"கோவிட் வைரஸ் பரவல் கட்டுப்பாடு, வாழ்க்கைத்தர மேம்பாடு மற்றும் பொருளாதார மீட்சி ஆகிய விடயங்கள் குறித்த அனுபவத்தை இந்த மாநாட்டில் பகிர்ந்து கொள்வதற்கு எதிர்பார்க்கின்றேன்.
உலகளாவிய ரீதியில் கோவிட் வைரஸ் பரவலானது மனித வாழ்க்கைக்கு பாரிய நெருக்கடியையும் அச்சுறுத்தல் நிலையையும் தோற்றுவித்திருக்கும் அதேவேளை, சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த வைரஸ் பரவல் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு மனித உயிரின் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கின்றது. தற்போதைய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரையில், நாம் எம்மை தனிமைப்படுத்திய ஒரு கட்டமைப்புக்குள் வாழ முடியாது.
மாறாகச் சர்வதேசத்துடன் பொருளாதார மற்றும் சமூக ரீதியான தொடர்பாடலையும் நல்லுறவையும் பேணுவது இன்றியமையாததாகும்.
அதேவேளை, இந்தக் கோவிட் வைரஸ் பரவலிலிருந்து முழுமையாக மீண்டு, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி, மீளவும் பழைய நிலைக்குத் திரும்புவதென்பது மிகப் பெரும் சவால் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
கோவிட் வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியிலும் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் சமூக மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவேண்டியதன் அவசியம் இலங்கை அரசால் உணரப்பட்டது.
அதன்படி முதலில் கோவிட் வைரஸ் பரவல் சங்கிலியை உடைப்பதற்கு நாம் முக்கியத்துவம் வழங்கினோம். அடுத்ததாகத் தொற்றுக்குள்ளானவர்களைத் தொற்றுக்குள்ளாகாதவர்களிடமிருந்து தனிமைப்படுத்தினோம்.
பின்னர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சையை வழங்குவதன் மூலம், தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தினோம்.
வருமான வீழ்ச்சி மற்றும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஆகியவற்றால் பொதுமக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தோம்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் தொற்றுக்குள்ளாவோரின் வீதத்தைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தினோம்.
இறுதியாகத் தொற்றுப் பரவலின்போதும் அதன் பின்னரும் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பேணுவதற்கு நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்தினோம்.
கோவிட் வைரஸ் பரவலின் முதலாம் மற்றும் இரண்டாம் அலையைத் திறம்பட எதிர்கொண்ட நாம், இப்போது அதன் மூன்றாவது அலையையும் வெற்றிகரமாக முறியடிக்கும் நிலையை அண்மித்திருக்கின்றோம்.
அதுமாத்திரமன்றி இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகள், வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் வர்த்தக பங்காளர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஒருபோதும் தவறவில்லை.
இலங்கையானது சுற்றுலாப் பயணங்களை
மேற்கொள்வதற்குப் பொருத்தமான மிகவும் பாதுகாப்பான நாடு என தெரிவித்துள்ளார்.