கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் : மலையக மக்கள் எழுப்பும் குரல் (Photos)
கூட்டு ஒப்பந்தம் இல்லாததால் தான் தமக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் , கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்களால் கனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் லிந்துலை நகரில் இன்று (12 ) முன்னெடுக்கப்பட்டது.
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும் பங்கேற்று கூட்டு ஒப்பந்தத்துக்காக குரல் எழுப்பினர்.
லிந்துலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் டயகம, தலவாக்கலை, கொட்டகலை, லிந்துலை மற்றும் ஏனைய தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சக்திவேல், கொட்டகலை, தலவாக்கலை பிரதேச சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட இ.தொ. காங்கிரஸின் பிரதிநிதிகளும் இப்போராட்டத்தில் பங்கேற்று, தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இப் போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை கண்டித்ததுடன், தமக்கு உரிய வகையில் சம்பள கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.








