கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்! - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு (VIDEO)
கிளிநொச்சி ஜெயந்தி நகரில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்தி நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி சிங்கராசா ஜீவநாயகம் விசாரணை மேற்கொண்டிருந்தார்.
விசாரணைகளில் சந்தேகம் எழுந்திருந்த நிலையில் நேற்றைய தினம் (20) மாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர்.தனுசன் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.
தொடர்ந்து குறித்த சடலம் பி.சிஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிரேத பரிசோதனை இடம்பெற்றிருந்தது.
அத்துடன், இன்று (21) பகல் சம்பவம் இடம்பெற்ற பகுதியை பார்வையிட்ட நீதவான் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த 32 வயதான குடும்ப பெண்ணான நிலகரட்ண ஜெயசீலி என்பவரின் சடலத்தை அவரது தாயாரிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஆயினும் மரணம் தொடர்பில் ஏற்படுகின்ற சந்தேகங்களிற்கு உதவியாக குறித்த சடலத்தை புதைக்குமாறும் உறவினர்களிற்கு பணித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணின் சடலம் அவரது தாயாரிடம் கையளிக்கப்படவுள்ளதுடன், இறுதி கிரியைகள் கெக்கிராவ எனும் அவர்களது பூர்வீக இடத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
மர்மமான முறையில் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தாயின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம்





