ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டமை திட்டமிட்ட செயலாகும்! - ரஞ்சித் மத்தும பண்டார
ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி, ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கக் கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் ஆசிரியைகள் சிலர் பொலிஸார் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பாரிய பிரச்சனை எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இன்று காலை கைது குறித்து நிலமைகளை கேட்டறிய தடுத்து வைக்கப்பட்டுள்ள துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது பொலிஸார் அனுமதி அளிக்கவில்லை.
இது மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வரப்பிரசாதங்களின் அடிப்படையில், எந்தவொரு பொது நிறுவனத்திலும் நுழைய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
மேலும், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல்லது சிறையில் இருக்கும் யாரையும் சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
எனினும் இன்று இடம்பெற்ற இந்த சம்பவம் நாடாளுமன்ற உறுப்பினரின் சலுகைகளை மீறுவதாகும். இது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
அவர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில், சட்டத்தரணிகளை சந்திக்கக் கூட பொலிஸார் அனுமதிக்கவில்லை. இது நாட்டின் அடிப்படை சட்டத்தின் கடுமையான மீறலாகும்.
போராட்டத்தின் பின்னர் திரும்பும் வழியில் பல்வேறு இடங்களில் வைத்தே ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பல்வேறு பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டவர்களை துறைமுக பொலிஸிற்கு கொண்டு சென்றமை, திட்டமிட்ட நடவடிக்கையாகத் தெரிகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் பாலூட்டும் தாய்மார்களும், பல்வேறு நோய்களுக்கு மருத்துவப் பொருளைப் பயன்படுத்துபவர்களும் இருந்தனர்.
கைது செய்யப்பட்ட குழுவின் அடிப்படைத் தேவைகள் கூட கடந்த நேரத்திற்குள் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த கைது மனிதாபிமானமற்ற செயலாகும்.
துறைமுக வளாகத்திற்குள் நுழைய துறைமுக அதிகார சபையின் அனுமதி தேவை என்று சாக்குபோக்கு சொல்வதற்கான குழந்தைத்தனமான முயற்சி இன்று இடம்பெற்றுள்ளது.
தற்போதைய அரசாங்கம் இப்போது நாட்டில் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுச் செயல்படுத்துகிறது என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
இது பொலிஸ் இராணுவ ஆட்சியில் உருவாகும் ஒரு சர்வாதிகார வெறியாகும்.
இந்தநிலையில், எதிர்க்கட்சித் தலைவருக்கு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள வரப்பிரசாதங்கள், சட்டத்தரணிகளின் வரப்பிரசாதங்களைப் பறித்தல் மற்றும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகளை பெறுவதற்கான வாய்ப்புகளை மறுப்பது போன்ற விடயங்களுக்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்திற்குள்ளும் நீதிமன்ற கட்டமைப்பு மூலமும் ஐக்கிய மக்கள் சக்தி எடுக்கும் என்று ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.