வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்த சாரதிக்கு நேர்ந்த விபரீதம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் நாவலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதியொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்த சிறியரக வாகனத்தின் சாரதி, வீதி ஓரத்தில் வாகனத்தினை நிறுத்தி விட்டு அதன் முன் நின்ற கொண்டிருந்த வேளையில் கந்தளாயில் இருந்து நெல் ஏற்றி வந்த லொறி குறித்த சிறியரக வாகனத்தின் மீது மோதியதில் அந்த வாகனம் சாரதியின் மேல் ஏறியதால் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் ஏறாவூர் 02ஐ காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அஹமட் லெப்பை லாபீர் (வயது 61) என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
விபத்து தொடர்பில் லொறி சாரதி வாழைச்சேனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபபட்டு வருகின்றன.




