தலவாக்கலையில் வெள்ள அனர்த்தம் - பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வு
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல தோட்டப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதன் காரணமாக பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்தப்பட்டுள்ளன.
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரஸ்டன் தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்த்தப்பட்ட மக்கள்
வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததையடுத்து, அவர்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றிய அதிகாரிகள், பிரஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிக நிவாரண முகாமொன்றை அமைத்து தங்கவைத்துள்ளனர்.
அதேவேளை, ஆட்லோ தோட்டத்திலும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு 94 பேர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவர்களது தோட்டத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர், சமைத்த உணவு மற்றும் அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தலவாக்கலை பிரதேச செயலகம், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், தோட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீர்மட்டம் உயர்வு
இதற்கிடையில், தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் நீர்வழித்தடங்களின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருவதால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளுக்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், சிறுவர்களை ஆறுகள் மற்றும் வெள்ளநீர் தேங்கியுள்ள இடங்களுக்கு அருகில் செல்ல அனுமதிக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலநிலை தொடர்ந்து சீரற்ற நிலையில் காணப்படுவதால், பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், தேவையெனில் மேலதிக மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.