தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்துவோம் என்ற சீனாவின் மிரட்டலால் பதற்றம்
தாய்வானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்துவோம் என சீனா மிரட்டல் விடுத்துள்ளதால் இருநாடுகள் இடையே மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
சீனாவில் 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் முடிவில் தாய்வான் தீவு, தனி நாடாக உருவானது.
ஆனால் அதை ஒப்புக்கொள்ளாத சீனா, அந்த தீவு இன்னமும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி வருகிறது.
இதனால் தாய்வான்-சீனா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் வருகையால் தற்போது இந்த மோதல் பூதகரமாக வெடித்துள்ளது.
கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தாய்வான் சென்றதால் ஆத்திரமடைந்த சீனா, தாய்வானை சுற்றிவளைத்து போர்ப்பயிற்சியை ஆரம்பித்தது.
கடந்த 4ஆம் திகதி ஆரம்பித்த இந்த போர்ப்பயிற்சி 8ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் சீனா இராணுவம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்துவோம் என சீனா மிரட்டல் விடுத்திருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.