இலங்கைக்குள் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இலங்கைக்குள் வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரவுள்ளது.
எனினும் கடந்த சில நாட்களாக இந்தியாவில் தங்கியுள்ளவர்களுக்கு பயணத்தடை தொடரும் என்று பொது வானூர்தி சேவையின் தலைவர் உப்புல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
தளர்வின்படி 75இற்கும் மேற்படாத பயணிகளைக் கொண்ட வானூர்திகளுக்கு அனுமதி வழங்கப்படும். நாட்டை வந்தடைபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கவைக்கப்படுவார்கள்.
இதன்போது அவர்கள் ஏற்கனவே கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது.
இந்த பயணங்களின்போது இலங்கையின் கடவுச்சீட்டுக்களை கொண்டிருப்பவர்கள், இரட்டை குடியுரிமைக்கொண்டவர்கள் ஆகியோருக்கு நாட்டுக்குள் வர முன்னனுமதி பெறத்தேவையில்லை.
எனினும் வெளிநாட்டவர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் இலங்கையின் வெளியுறவு
அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என்று பொது வானூர்தி சேவையின் தலைவர்
தெரிவித்துள்ளார்.