பொகவந்தலாவையில் 20 வாகனங்களுக்கு போக்குவரத்து தடை : எச்சரித்த அதிகாரிகள்
ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியில் போக்குவரத்துக்கு தகுதியற்ற 20 வாகனங்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று(29.12.2025) மதியம் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக தடை
நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன விசேட பரிசோதகர் ஜாலிய பண்டார மற்றும் மோட்டார் வாகன பரிசோதகர் இந்திக கருணாரத்ன கண்காணிப்பின் கீழ், ஹட்டன் போக்குவரத்து பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொகவந்தலாவ பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் இணைந்து நேற்று, பொகவந்தலாவ பேருந்து நிலையத்தில் 36 வாகனங்கள் மீது தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது, 3 இ.போ.ச பேருந்துக்களும் , 9 முச்சக்கர வண்டிகள் மற்றும் 8 தனியார் பேருந்துகள், லொறிகள் அடங்கலாக மொத்தமாக 20 வாகனங்கள் வீதியில் சென்று வர தகுதியற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த 20 வாகனங்களும் 30 நாட்களுக்கு சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
மேலும், அந்த வாகனங்களின் வருவாய் உரிமம் மோட்டார் வாகன ஆய்வாளரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளரால் பரிசோதிக்கப்பட்ட வாகனங்களின் குறைபாடுகளை 30 நாட்களுக்குள் சீர்திருத்தம் செய்து, தொடர்புடைய மோட்டார் வாகன பரிசோதகரிடம் காண்பிக்க வேண்டும்.

அதன் பின்னரே, வாகனங்களை இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன பரிசோதகரின் காவலில் உள்ள வருவாய் உரிமம் அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை
இவ்வாறு வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்துக்குள் இந்த வாகனங்களை சீர்செய்வதற்கு தவறும் பட்சத்தில், நீதிமன்ற நடவடிக்கை மூலம் அபராதம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளைத் தொடர்ந்து, பிரதான வீதிகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும் முறையான பராமரிப்புடன் இயக்கப்பட வேண்டும்.

சரியான பராமரிப்பு இல்லாமல் வாகனங்கள் இயக்கப்பட்டால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த அவசர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், எதிர்வரும் நாட்களில் நுவரெலியா மாவட்டம் முழுவதும் இதேபோன்ற அவசர பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் தெரிவித்துள்ளார்.





