யாழில் நிலவும் சீரற்ற காலநிலை! மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்
அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அறிவிப்பு அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் இன்றைய தினம் (26) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைகளுக்கு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்துகொண்டார்.
முன்னாயத்த நடவடிக்கை
அத்துடன், அனர்த்தம் ஏற்படும் போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந்து விலகமுடியாது எனவும், அடுத்த ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரை கிராம மட்ட ரீதியாக எடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், தற்போது உடனடியாக வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான தடைகளை ஜேசிபி மூலம் அகற்றுவதற்கான இடங்களை உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து, உடனடியாக அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதற்கட்டமாக 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும், பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டால் அவ் நிலையத்திற்கு சுழற்சி முறையில் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தும் செயற்பாட்டை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொலைபேசி இலக்கம்
மேலும், உணவுப் பொதிகள், தறப்பாள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் போது பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலக 0212117117 இலக்க தொலைபேசிக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும்.

அத்தோடு, இந்த இலக்கத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பதிலளிப்பார் எனவும் அவர் பதிலளிக்காது தவறுதலாக தவறும்பட்சத்தில் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அந்த தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.