இளம் பெண் வைத்தியரின் மர்மமான மரணம் - ஏமாற்றப்பட்ட பல பெண்கள் - காதலன் தொடர்பில் வெளியான தகவல்
கண்டி, தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் வைத்தியரின் காதலன் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியரான 33 வயதான ஷம்யா தர்ஷனி என்ற பெண் 17 ஆம் திகதி கார் ஒன்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
ஹோட்டல் அறையின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு
ஜூன் 3 ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் குறித்த பெண் தனது காதலன் என அறியப்படும் நபருடன் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

ஹோட்டல் அறையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 16 ஆம் திகதி இரவு சுமார் 9.50 மணியளவில் அந்த பெண்ணின் காதலன் வருகை தந்து சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்த பின்னர் இரவு சுமார் 10.30 மணியளவில் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை காரில் ஏற்றி அழைத்துச்சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்பின்னர் சந்தேகநபரான காதலன் சடலம் தொடர்பில் பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல் வழங்கியதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தெல்தெனியா பொலிஸ் அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்குச்சென்று ஆய்வு செய்தபோது, காரின் முன் இருக்கையில் கருப்புத்துணியால் மூடப்பட்ட நிலையில் சடலம் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
சந்தேகநபரான அவரது காதலன் தற்போது அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவர் திருமணமானவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் உண்மை தகவல்
சந்தேகநபர் கணினி மென்பொருள் பொறியாளர் என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதில் உண்மையில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விசாரணையில் முதலில் அவர் கன்னொருவ பகுதியை சேர்ந்த 38 வயது நபர் என தெரியவந்த நிலையில், அவரது உண்மையான வசிப்பிடம் குருநாகல், நாரம்மல பகுதியில் என சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் இளம் பெண்களுடன் தொடர்பில் இருந்து அவர்களிடமிருந்து பணத்தை மோசடி செய்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளும், வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழுக்கை தலை காரணமாக போலி முடி அணிந்து பெண்களை ஏமாற்றி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
வாகனம் தொடர்பில் வெளியான தகவல்
சந்தேகநபர் பெண்ணின் உடலைக்கொண்டு செல்ல பயன்படுத்திய கார், அம்பாறை பகுதியில் சந்தேகநபருடன் உறவில் இருந்த ஒரு பெண்ணுக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை கைது செய்வதற்காக, மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா தலைவர் மற்றும் பிரதி பொலிஸ் மா தலைவர் ஆகியோரின் தலைமையில் பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், உயிரிழந்த பெண்ணிற்கு பிரேத பரிசோதனை நேற்று தெல்தெனிய வைத்தியசாலையில் சிறப்பு தடயவியல் வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு முடிவு எட்டப்படாத நிலையில், அவரது உடல் பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், சடலம் தற்போது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனடாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள்
இது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் ஏற்பட்ட மரணமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணும் அவரின் காதலனும் கனடாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகை பணத்தினை வங்கி மற்றும் பல தனிநபர்களிடமிருந்து கடனாக பெற்றிருந்து இதுவரை வெளிநாடு செல்லாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் மீண்டும் பணம் கேட்பதால் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அதன்படி, அவரது காதலன் தினெத் திசாநாயக்கவை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்ய தேடப்பட்டு வரும், இறந்த பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் நபருக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.
இதற்கிடையில், வெலிகம பகுதியைச் சேர்ந்த இறந்த பெண்ணின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan