முத்துவிநாயகர் தமிழ் வித்தியாலயத்திலிருந்து மாணவர்களை வீட்டிற்கு அழைத்து சென்ற பெற்றோர் (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் முத்து விநாயகர் தமிழ் வித்தியாலயம் ஆரம்ப பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று (01.11.2022) பதிவாகியுள்ளது.
பாடசாலையில் அதிபர் இல்லாத நிலையில் நேற்று (01.11.2022) ஒரு ஆசிரியர் மட்டுமே வருகை தந்துள்ளார்.
ஆசிரியர் பற்றாக்குறை
தரம் 5 வரையான வகுப்புக்களை கொண்ட பாடசாலையில் ஒரு ஆசிரியர் எவ்வாறு அனைத்து மாணவர்களுக்கும் கல்வியினை கற்றுக்கொடுக்க முடியும் என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளதை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவர்களை வீடுகளுக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.
அதேவேளை பாடசாலைக்கு சரியான அதிபரை நியமிக்கும் வரை தமது பிள்ளைகளை பாடசாலை அனுப்பப்போவதில்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி நடவடிக்கை
72 மாணவர்களை கொண்ட இந்த ஆரம்ப பாடசாலையில் 6 ஆசிரியர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். பாடசாலையில் கடமையில் இருந்த அதிபர் கடந்த மே 25ஆம் திகதி விபத்து ஒன்றின் போது உயிரிழந்துள்ளதை தொடர்ந்து இதுவரை எந்த அதிபரும் பாடசாலைக்கு நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் குறித்த ஆறு ஆசிரியர்களில் பலர் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை என தெரியவருகிறது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களும் இந்த பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கோட்டக்கல்வி பணிமனை, வலயக்கல்வி பணிமனை என்பவற்றுக்கு பெற்றோர்களால் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால் அனைத்து மாணவர்களையும் வேறு பாடசாலைக்கு கொண்டு சென்று சேர்க்கும் நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.