பேருந்து பற்றாக்குறையில் சிரமத்திற்குள்ளான ஆசிரியர்கள்(Photos)
யாழ்ப்பாணத்திலிருந்து வரும் ஆசிரியர்கள் பலர் பேருந்து பற்றாக்குறையினால் சிரமத்துக்குள்ளாகியிருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.
பற்றாக்குறை
யாழ்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு வருகை தரும் ஆசிரியர்களே அங்கு காணப்படும் பல கிராம பாடசாலைகளுக்கு செல்வதற்கு பேருந்து பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியின் கிராமங்களில் உள்ள தங்களது பாடசாலைகளுக்குச் உரிய நேரத்திற்குச் செல்வதற்கு பஸ்கள் இன்மையால் காலை ஒன்பது மணிவரை வீதியில் காத்திருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து வீட்டுப் பணிகளை முடித்துவிட்டு அங்கிருந்து பிரதான வீதிக்கோ அல்லது யாழ். நகருக்கோ ஒரு பேருந்தில் பயணம் செய்து அங்கிருந்து கிளிநொச்சிக்கு பிரிதொரு பேருந்தில் பயணத்தை மேற்கொண்டு வருகைதந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையினர் தங்கள் பணியாளர்களுக்கான எரிபொருள் கோரி பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதேவேளை தனியார் பேருந்துகள் போதிய எரிபொருள் இன்றி தங்களது சேவையினை மட்டுப்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக தாம் உரிய நேரத்திற்கு பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளில் தினவரவை உறுதிப்படுத்துவதற்கு கைவிரல் அடையாள இயந்திர பயன்பாடு இருப்பதனால் தாமதமாகி செல்கின்ற போது சில வேளைகளில் அரைநாள் கடமையாக பதியப்படுகின்றன.
கோரிக்கை
மாணவர்கள் முதல் பாடவேளையை வெறுமையாக கழிக்கின்றனர் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.