விடுதலைப் புலிகளின் தலைவர் கோராத வரி! முன்னாள் பிரதமர் ரணில்
அரசாங்கத்தின் தேர்தல் உறுதி மொழியும் கோசங்களும் ஒரே நாடு ஒரே சட்டம் என்றே காணப்பட்டது. ஆனால் துறைமுக நகருக்கென தனிச் சட்டத்தை உருவாக்குவதற்கு தற்போது முயற்சிக்கப்படுகின்றது. இதனை நாங்கள் எதிர்க்கின்றோம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உத்தேச ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் பார்க்கையில் இரு சட்டக் கொள்கையே இலங்கையில் ஏற்படப்போகின்றது. துறைமுக நகர் நிர்வா கட்டமைப்பை மையப்படுத்தி அரசாங்கம் முன்வைத்துள்ள உத்தேச சட்ட மூலத்தின் பிரகாரம் ஒரே நாடு இரு சட்டங்கள் என்ற நிலைமையே ஏற்படவுள்ளது.
அதன் அடிப்படையிலேயே நோக்க முடிகிறது. நாடாளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்காது நிறைவேற்று அதிகாரம் சட்டங்களை உருவாக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவின் அதிகாரங்கள் குறிப்பாக வரி அறவீட்டு அதிகாரங்கள் போன்றவைகளை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட கோரியிருக்கவில்லை.
நாட்டில் இத்தகைய இரு சட்டக் கொள்கை காணப்படுகின்றமை போராபத்தாகும். நாட்டின் மூலச்சட்டத்தின் கீழ் துறைமுக நகரை நிர்வகிக்க முடியும். கொழும்பு துறைமுக நகர் குறித்து நாம் வகுத்த திட்டமும் நாட்டின் ஒரே சட்டத்தின் கீழ் நிர்வகிக்கும் வகையிலேயே காணப்பட்டது.
மஹிந்த ராஜபக்சவே துறைமுகநகர் குறித்து சீனாவுடன் ஆரம்ப கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அதன் பின்னர் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தில் குறைபாடுகள் காணப்பட்டன.
இதன் பின்னர் குறித்த ஒப்பந்தத்தை திருத்தத்திற்கு உட்படுத்தி துறைமுக நகரின் அபிவிருத்தி, வணிக செயற்பாடுகளை சீனதுறைமுக நிறுவனத்திற்கு வழங்கினோம்.
நிதி, நிர்வாகம் இலங்கை வசமே காணப்பட்டது. துறைமுக நகரின் நிதி நிர்வாகத்திற்கு சீனா உள்வாங்கப்படவில்லை.
ஆனால் இவை அனைத்தையும் மாற்றியமைத்து தற்போதைய அரசாங்கம் சிக்கலுக்குள் கொண்டு சென்றுள்ளது.
எனவே துறைமுகத்தின் நிதி, நிர்வாகம் ஆகிய இரு விடயதானங்களையும் நாம் ஏற்கனவே வகுத்த திட்டத்தின் பிரகாரம் கையாளப்பட வேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும்.