கல்முனையில் சட்டவிரோத கட்டட நிர்மாணங்களை உடனடியாக நிறுத்துமாறு பணிப்பு
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமாக கட்டடங்களை நிர்மாணிப்பவர்கள் அவற்றை உடனடியாக நிறுத்துமாறு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது விடயமாக அவர் இன்று (10) வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடுவோர் நகர அபிவிருத்தி அதிகார சபை (UDA) கட்டளைச் சட்டத்தின் கீழ் மாநகர சபையின் அனுமதி பெற்ற பின்னரே நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
ஆனால், கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சில இடங்களில் தற்போது சிலர் மேற்படி அனுமதியைப் பெறாமல் வீதியை ஆக்கிரமித்து கட்டடங்கள் அமைப்பதாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.இவ்வாறு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக அமைக்கப்படும் அக்கட்டுமானப் பணிகள் யாவும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
இது விடயமாக ஏற்கனவே மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களினால் சம்மந்தப்பட்டோருக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வுத்தரவை மீறுவோர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, 01 இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என்பதுடன், குறித்த கட்டுமானங்கள் மாநகர சபையினால் உடைத்தகற்றப்படும் எனவும், இதற்கான செலவும் குறித்த நபர்களிடமிருந்து அறவிடப்படும் எனவும் அறியத்தரப்படுகிறது.
அதேவேளை, இதற்கு முன்னர் கட்டிடங்களை நிர்மாணித்திருப்பவர்களும் அதற்கான
அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்படுகிறது என கல்முனை
மாநகர முதல்வர் மேலும் தெரிவித்துள்ளார்.