இந்திய கட்டிடங்களை குறிவையுங்கள்!தலீபான்களுக்கு பாகிஸ்தான் உத்தரவு
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய சொத்துக்கள், இந்திய கட்டிடங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தும்படி ஜிகாதி ஆயுதப் போராளிகள் மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கி கொண்டுள்ள நிலையில், அங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் தனது கட்டுக்குள் கொண்டு வர தொடங்கியுள்ளனர்.
400 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பகுதியை தலிபான்கள் கைப்பற்றி விட்டதாகவும், முக்கிய நகரங்கள், முக்கியமான சாலைகள் மற்றும் எல்லை பகுதிகள் தற்போது தலிபான்கள் வசம் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் அரசு தலீபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்ற நிலையில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஜிகாதி ஆயுதப் போராளிகள் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துவிட்டதாகவும், தலீபான்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருவதாகவும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்னிலையில் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய சொத்துக்கள், இந்திய கட்டிடங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தும்படி ஜிகாதி ஆயுதப் போராளிகள் மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஆப்கானிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் கல்வித்துறையில் பெரும் பங்களிப்பை செய்துள்ள இந்தியா ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து உதவியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் முதல் இலக்கு இந்திய சொத்துக்களாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உளவுத்துறை மிக தெளிவாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காபூல் விமான நிலையத்தின் நிலைமையை மற்ற நாடுகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதால், கட்டுமானப் பணிகள் மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ள இந்திய மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் அங்கு இந்தியர்கள் இருப்பதை உன்னிப்பாக கவனித்து, அவர்களை வெளியேற செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.