ஐ.நா கூட்டத்தொடரில் தமிழர்களின் குரல்: காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் வலியுறுத்து
இந்த நாட்டில் தமிழர்கள் இன அழிப்பு செய்யப்பட்ட விடயத்திற்கான குரல் ஐ.நா கூட்டத் தொடரின் போது ஒலிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அமலநாயகி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று(08) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“பல ஆண்டு காலமாக எமது உறவுகளுக்கு நீதிகோரி போராடிய போதிலும் 17 வருடமாக இலங்கை அரசாங்கம் நீதியை வழங்க மறுத்ததன் காரணமாக சர்வதேச நீதிப் பொறிமுறையின் ஊடாகவே எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சர்வதேசத்தினை நோக்கி எங்களது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றோம்.
சாதகமான அறிக்கை
எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜ.நா அமர்வில் இலங்கை தொடர்பான பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும். அதில் வெளியிடப்படும் அறிக்கைகள் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு சாதகமான அறிக்கைகளாக இருக்க வேண்டும்.
பல்வேறு நாடுகளும் எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதிகிடைக்கும் வகையில் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதற்காகவே எதிர்வரும் 30ஆம் திகதி பாரிய போராட்டங்களை வடக்கு கிழக்கில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



