தமிழக முதல்வருக்கு ஈழத்தமிழர்களின் இதயபூர்வமான வாழ்த்துக்கள்- சிவஞானம் சிறீதரன்
நடைபெற்று முடிந்த தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தங்கள் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றதையிட்டும், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக தாங்கள் பதவியேற்கவுள்ளதையிட்டும் புளகாங்கிதம் அடையும் அதேவேளை ஈழத்தமிழர்கள் சார்பில் எமது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றதையிட்டு ஸ்டார்லினுக்கான வாழ்த்து கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
மறைந்த முன்னாள் முதல்வர், கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத்தமிழர்களின் இனவிடுதலைப் போருக்கு ஆற்றியிருக்கும் பணிகள் அளப்பரியவை. எப்பொழுதெல்லாம் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாத அரசால் அடக்குமுறைகளும், இன வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டனவோ அப்பொழுதெல்லாம் சிங்கள வல்லாதிக்கத்திற்கெதிராக தி.மு.க பிரயோகித்த அழுத்தங்களும், மேற்கொண்ட எதிர் நடவடிக்கைகளுமே எமது மக்களைக் காக்கும் கவசங்களாகவும், அவர்களின் மனங்களை ஆற்றுப்படுத்தும் அருமருந்தாகவும் இருந்திருக்கிறது.
தமிழினத் தேசியத் தலைவர் மீதும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இனவிடுதலைப் போராட்டம் மீதும், கலைஞர் அவர்கள் கொண்டிருந்த பற்றுறுதியும், நம்பிக்கையுமே அப் போராட்டத்தை அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் சென்றிருந்தது.
அவர் ஆற்றிய அத்தகைய அபரிமித செயல்களையும், சகோதரி கனிமொழி அவர்களின் யாழ்ப்பாண வருகையையும், விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களை இழந்து நாம் ஆறாத்துயருற்றிருந்த வேளை அத்தனை மக்களும் சுமந்துநின்ற அச் சொல்லொணாத் துயரத்திற்கு மருந்திடுவது போல் கலைஞர் அனுப்பிவைத்த அனுதாபச் செய்தியையும் இந்தப்பொழுதில் நினைத்து நெகிழ்கிறோம்.
அத்தகைய கலைஞரின் மகனாய், அவரது அரசியல் வாரிசாய் அதே கொள்கையோடும்,
இலட்சியத்தோடும் ஆட்சிப்பீடம் ஏறியிருக்கும் தாங்களும் தந்தையின் வழி
என்றென்றைக்கும் எமது தொப்புள்கொடி உறவாய் தோள் கொடுப்பீர்கள் என்ற பெரும்
திடத்தோடு, உங்களின் வெற்றிக்கான வாழ்த்துக்களைக் கூறும் அதேவேளை தங்கள்
ஆட்சியும், பணியும் சிறக்க இறை ஆசிகளையும் வேண்டி நிற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.