அவுஸ்திரேலியாவில் பொலிஸாரை தாக்க முயன்ற தமிழருக்கு நேர்ந்த கதி
அவுஸ்திரேலியாவில் அதிகாரிகளை தாக்க முயன்ற தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியர் ஒருவர் பொலிஸாரால் இன்று(28.02.2023) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து செய்தியாளர் கூட்டத்தில், நியூ சவுத் வேல்ஸ் பொலிஸ் உதவி ஆணையர் ஸ்டூவர்ட் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போது,குறித்த நபரை சுடுவதை தவிர வேறு எதுவும் வழியில்லை என தெரிவித்துள்ளார்.
அதிகாரிகளை தாக்க முயற்சி
அவுஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் உள்ள ஆபர்ன் புகையிரத நிலையத்தில் இன்று(28.02.2023) துப்புரவுத் தொழிலாளியை இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது என்ற நபர் கத்தியால் குத்தி தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அதனை தொடர்ந்து ஐந்து நிமிடங்களுக்கு பிறகு ஆபர்ன் பொலிஸ் நிலையத்திற்கு வந்த சந்தேகநபர், அங்கிருந்து வெளியேறி கொண்டிருந்த இரண்டு சட்ட அமுலாக்க அதிகாரிகளை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த இந்தியரின் செயலால் ஆத்திரமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார், அவற்றில் இரண்டு குண்டுகள் அவரின் மார்பு பகுதியை தாக்கியது என்று பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே சிகிச்சை
அத்துடன் குறித்த இந்தியர் சம்பவ இடத்திலேயே துணை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக் கொண்டு செல்லப்பட்டார் எனவும், ஆனால் அவர் உயிரிழந்துவிட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிட்னியில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தால், தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா சையத் அகமது என்பவரே பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டார்.
இதேவேளை அகமது, பிரிட்ஜிங் விசாவில் அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த நிலையில், அவர் மனநல பாதிப்பிற்குள்ளானாரா என்று புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




