இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் கையெழுத்திடாத தமிழ்பேசும் கட்சிகள் மீண்டும் சந்திப்பு!
இந்திய பிரதமருக்கான ஆவணத்தில் கையெழுத்திடாத தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்த வகையில் தமிழ்பேசும் கட்சிகள் மீண்டும் சந்திக்கவிருக்கின்றன.
இந்த தகவலை தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 13வது அரசியல் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்திய பிரதமரின் தலையீட்டைக் கோரி தயாரிக்கப்பட்ட ஆவணம் எதிர்வரும் வாரத்தில் இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் கையளிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆவணத்தில் கையெழுத்திடாதபோதும், வெளியில் இருந்து தமிழ் பேசும் கட்சிகளின் நகர்வுகளுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்த நிலையில் அடுத்த கட்ட சந்திப்பு நடத்தப்படும் என்று செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இந்திய பிரதமருக்கான ஆவணத்தின் பொதுவான விடயமாக கூறப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் தொடர்பில் கட்சிகள் கலந்துரையாடலை நடத்தவுள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.