நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினை விரும்பியவர்கள் தமிழ்பேசும் தலைவர்களே: டக்ளஸ்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை விரும்பியவர்கள் தமிழ்பேசும் தலைவர்களே என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் வட்டார அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கச்சதீவினை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக உத்தியோகபூர்வ தகவல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. அவ்விடயம் அரசியலிற்காகப் பேசப்பட்ட விடயமோ தெரியாது.
ஆனால் இது தொடர்பாக எந்த கலந்துரையாடலும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. அவ்வாறு கச்சதீவினை இந்தியாவிற்கு வழங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாது.
21ஆவது சீர்திருத்தமானது நாட்டினுடைய நாடாளுமன்றத்திற்கும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கும் இடையிலான அதிகாரங்களைப் பற்றியதாகும். அந்தவகையில் 13ஆவது சீர்திருத்தமும், 21ஆவது சீர்திருத்தமும் சம்மந்தப்பட்டதல்ல.
ஒரு காலகட்டத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையினை தமிழ்த் தேசிய தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், அல்லது மலையக மக்களுடைய தேசிய தலைவர் தொண்டமான், முஸ்லிம் மக்களுடைய அஷ்ரப் ஆகியோர் இருந்த காலகட்டத்தில் இதனை வலியுறுத்தி வந்தனர்.
அதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையானது தமிழ்பேசும் மக்களுக்குப் பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என கூறியிருந்தனர்.
கடற்தொழிலாளர்களுடைய பிரச்சினை இயன்றளவு தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். மேலும் வடமாகாண கடற்தொழிலாளர்களுக்கு இந்திய கடற்தொழிலாளர்களுடைய இழுவை படகுகளினுடைய அத்துமீறிய மீன்பிடிப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக வளங்கள் அழிக்கப்படுதல் போன்றவை பாரிய பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன.
அத்தோடு
கடற்றொழிலாளர்களுடைய தொழில் உபகரணங்கள் அழிக்கப்படுகின்றன.
இவ்வாறான பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கண்டு வருகின்றோம். அதேபோன்று எரிபொருள்
பிரச்சனைக்குத் தீர்வும் எட்டப்படவுள்ளது என கூறியுள்ளார்.