தமிழ் கட்சிகள் தமது அரசியல் வேலைத்திட்ட வரைபை முன்வைப்பார்களா!
கடந்த 28/03/2025 அன்று வெளியிடப்பட்ட வட- கிழக்கில் காணி சுவீகரிப்பு பற்றிய வர்த்தமாணி அறிவித்தலும் அதற்குப் பின்னர் இந்த வாரம் வழக்கம் போல சிங்கள தலைவர்களின் வாய்மொழி வாக்குறுதியை நம்பி தமிழ் தலைமைகள் தமிழ் மக்களிடையே அக்கப்போரை நிகழ்த்துகின்றனர்.
இது ஒன்றே போதும் தமிழர்கள் ஏன் தொடர்ந்து சிங்கள அரசியல் தலைவர்களால் இலகுவில் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்பதற்கு. ஒரு வர்த்தமானி அறிவித்தலை வைத்துக்கொண்டு தமிழ் தலைமைகளின் அரசியல் சாணக்கியத்தையும், அரசியல் ஆளுமையையும், முதிர்ச்சியையும் அளவிட முடியும்.
அந்த அளவுகோல் இவர்களை அளவீடு செய்துதரும் புள்ளி என்னவெனில் தமிழ் தலைவர்களுக்கு பூஜ்ஜிய புள்ளியையே வழங்குகிறது.
எனவே இப்போது தமிழ் தலைமைகள் தமக்கான இலக்கு என்ன? இலக்கை அடைவதற்கான கொள்கை என்ன? என்பதனை விளக்கவல்ல ஒரு எழுத்து மூல அரசியல் வேலை திட்டத்தை வரைபை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்திவிட்டது.
வர்த்தமானி அறிவித்தல்
காணி சுவிகரிப்பு வர்த்தமானி அறிவித்தல் தலைவர்களின் உண்மை முகங்களை வெளிக்காட்டி விட்டது. அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தமிழ் தலைமைகள் பலவும் கூக்குரல் இட்டன. சட்டத்தரணி குலாத்தினர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த வாரம் ஜனாதிபதியும், பிரதமரும் அந்த வர்த்தமானி அறிவித்தலை மீளப் பெறுவதாக வெறும் வாய்மூல வாக்குறுதியை வழங்கினர். இந்த வெறும் வாய்மூல அறிவிப்பு இலங்கையில் சட்டமாகாது. ஒரு வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்வதாக இருந்தால் அதை ரத்து செய்வதான இன்னும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் விடப்பட வேண்டும்.
அவ்வாறு விடப்படாத நிலையில் ஏற்கனவே வெளியான அந்த வர்த்தமானி அறிவிப்பு என்பது சட்டபூர்வமானது. அது நடைமுறையில் உள்ளது என்பதையே குறித்து நிற்கும்.
ஆயினும் வாய்மூல வாக்குறுதியை வைத்துக்கொண்டு அதனை தங்களுடைய வெற்றியாகவும் அந்த வெற்றியை நான்தான் பெற்றுக் கொடுத்தேன் என ஒவ்வொரு அரசியல் பிரமுகர்களும் உரிமை கோரி அற்பத்தனமாக மக்கள் மத்தியில் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஒரு விடயமே போதும் தமிழ் தலைமைகளின் அரசியல் அறிவீனத்துக்கும், அரசியல் பித்தலாட்டத்திற்கும், தமிழ் மக்களை எந்த அளவிற்கு கீழ் இறங்கி இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கும் நல்ல உதாரணம்.
""வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி"" ஆம் வரலாறு என்ற சொல் மனித வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய சொல் அதை இன்னொரு வடிவில் சொன்னால் ""வரலாற்றுக்கு மன்னிக்கத் தெரியாது தவிர தெரியாத ஒன்றும் இல்லை"" என்பர் அதாவது வரலாற்றுக்கு அனைத்தும் தெரியும்.
அது யார் விட்ட தவறுகளையும் மன்னிக்க மாட்டாது ஏன் மன்னிக்க மாட்டாது? அதுதான் கற்றுக் கொடுத்த பாடங்களை மனிதன் கற்கவில்லை என்பதனால் அது மன்னிக்க மாட்டாது. அது எந்த ஒளிவு மறைவு இன்றி அனைத்தையும் தேவையான இடத்தில் சொல்லிவிடும். ஆகவே வரலாறு மனிதனுக்கு கற்றுக் கொடுத்த பாடத்தில் எதனையும் கற்கவில்லை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கும்.
சாம்பல் மேடு
இது ஈழத் தமிழர்களுடைய அரசியல் வரலாற்றுக்கு மிகவும் பொருத்தமானது. கடந்த இருநூறு ஆண்டுகளாக இலங்கைத் தீவில் தமிழர்கள் தொடர்ந்து ஏன் தோல்வி அடைகிறார்கள்? அல்லது தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்? அரசியலில் அவர்கள் ஒரு குண்டூசி முனை அளவு நிலத்தின் அதிகாரத்தைதானும் பெற முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
ஏன் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதைக்கூட உணராதவர்களாக தோல்வி அடையும் பாதையிலேயே தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். எந்த ஒரு திட்ட வரைபையும் கொண்டிருக்காமல் தலைமைகள் எனப்படுவோர் தம் மனம் போனபோக்கில் அவரவர் நலன்களுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்றவாறு தமிழ் மக்களை இழுத்துச் சென்று தொடர் தோல்வியே பரிசளித்துள்ளனர்.
விட்டில் பூச்சியின் இலட்சியம் ஒளியை நாடிச் செல்வது. அந்த ஒளி தன்னை அழித்து விடும் என்று அறியாமலே அது ஒளியை நாடிச் சென்று தீயில் விழுந்து கருகி சாம்பல் மேட்டை உருவாக்குகிறது.
இதனையை தமிழ் மக்களும் தூய இலட்சியம் என்ற பெயரால் விட்டில் பூச்சி போல தோல்வி எனும் சாம்பல் மேட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இன்று இலங்கையின் அரசியல் அதிகாரத்தை இடதுசாரிகள் கைப்பற்றியதன் மூலம் இலங்கையின் அரசியல் வரலாறு புதிய ஒரு பரிநாமத்துக்குச் செல்லகிறது. இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் தமக்குடையிலான போட்டிகளிலும், சச்சரவுகளிலுமே அதிக நாட்டம் காட்டுகிறார்கள்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறுவதற்கான ஒரு அரசியல் திட்ட வரைபை எந்த கட்சியும் கொண்டிருக்கவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் இருப்பு நிலை நெருக்கடியில் தமிழ் மக்களை தற்காத்துக் கொள்வதற்காக போராடுவதற்கு ஒரு அரசியல் வேலைத்திட்டம் வரையறுக்கப்பட வேண்டும்.
அரசியல் வேலைத்திட்டமின்றி போராட்ட அரசியலில் வெற்றிபெற்றிட முடியாது. இப்போது தமிழ் தலைமைகள் எனப்படுவோர் உடனடியாக ஒரு அரசியல் வேலை திட்டத்தை எழுத்து வடிவில் முன்வைக்க வேண்டும்.
ஒற்றையாட்சி
தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான தொடர் போராட்டங்களில் தொடர்ந்து தோல்வியடைகிறோம் அல்லது தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.
இப்போது தமிழ் மக்களின் அரசியல் இலக்கு என்ன? அந்த இலக்கை அடைவதற்கான கொள்கை என்ன? என்ற இந்த இரண்டு பிரதான கேள்விகளுக்கும் தமிழ் தலைமைகள் முதலில் பதில் அளிக்க வேண்டும். வெறுமனே எழுந்தமானமாக போராடுவோம், போராட்டம் வெடிக்கும், நீதி நிலை நாட்டப்படும், தர்மம் வெல்லும் என வாயால் வெடிப்பதனால், மேடைகளில் முழங்குவதனால் எந்தப் பயனையும் அடைந்து விட முடியாது.
இலங்கைத் தீவின் வரலாற்றில் தமிழர்களுக்கான தனி அதிகார அலகு 1833ஆம் ஆண்டு கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தின் மூலம் இல்லாத ஒழிக்கப்பட்டு இலங்கைத் தீவு ஒரே நிர்வாக அலகாக ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டதிலிருந்து ஒரு நூற்றாண்டு காலம் நாம் ஒற்றை ஆட்சிக்குள் இருக்கிறோம் என்பதை கூட தமிழர்கள் பெரிதாக உணர்ந்திருக்கவில்லை.
ஆயினும் ஒரு நூற்றாண்டை கடக்கின்ற நிலையில் டொனமூர் அரசியல் யாப்பு அறிமுகமான போதுதான் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளும், பிரதிநிதித்துவமும் பற்றிய விழிப்பு அந்த ஒரு நூற்றாண்டையும் பிரதிநிதித்துவப் படுத்திய குடும்பத்தின் இறுதி வாரிசான சேர் பொன் இராமநாதனுக்கு ஏற்பட்டது.
ஆயினும் அவரால் ""டொரமூர் என்பது இனி தமிழர்கள் இல்லை"" என்று மாத்திரமே சொல்ல முடிந்தது. அப்படியானால் அவர்களின் குடும்பம் ஒரு நூற்றாண்டு காலமாக தமிழ் மக்களுக்கான அரசியலை சரியாக முன்னெடுக்க தவறிவிட்டனர். அவர்களுக்குப் பின் வந்த ஜி ஜி பொன்னம்பலமும் சரி எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் அன்று ஒற்றையாட்சியையே வரவேற்றனர். அதற்காகவே பாடுபட்டனர்.
டொனோருக்கு பின்னர் ஐவர் ஜன்னிங்சால் உருவாக்கப்பட்ட மந்திரி சபை நகல் யாப்பை இந்த இரண்டு தலைவர்களின் ஏற்றுக் கொண்டார்கள். அந்த மந்திரி சபை நகல் யாப்புத்தான் 1947ல் சோல்பெரி யாப்பாக பரிமாணம் பெற்றது. ஆக ஒற்றை ஆட்சியைப் பலப்படுத்தவும், அதற்காக மிகக்கடுமையாக உழைத்ததும் தமிழ் தலைமைகளின் தவறு என்பதை நாம் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
வட்டுக்கோட்டை தீர்மானம்
ஆனால் பிற்காலத்தில் செல்வநாயகம் சமஸ்டியை கோரி சமஷ்டிக் கட்சியை உருவாக்கினார் என்பதும் அந்தக் கட்சி பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் என்ற இரண்டு ஒப்பந்தங்களை சிங்கள தலைவருடன் செய்ததன் மூலமும் டட்லி சேனநாயக்கரின் தேசிய அரசாங்கத்தில் இணைந்து பங்காற்றியதின் மூலமும் சமஷ்டியை நிராகரித்து விட்டனர். அல்லது கைவிட்டு விட்டார் என்பதனையும் இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
செல்வாவும் ஜி ஜியும் இணைந்து உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தனிநாடு கோரிக்கையை முன் வைத்ததன் மூலம் அவர்கள் ஒற்றை ஆட்சியை நிராகரித்தார்கள் என்று எடுத்துக்கொள்ளப்பட்டாலும் உண்மையில் வட்டுக்கோட்டை தீர்மானம் அறிவிக்கப்பட்டதோடு அது முடிவுக்கு வந்துவிட்டது என்று கொள்வதே பொருந்தும்.
ஏனெனில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து 1977 தேர்தலில் பெருவெற்றியைப் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான விருப்பையே, திடசங்கர்ப்பத்தையோ, அரசியல் வேலைத்திட்ட வரைபையோ கொண்டிருக்கவில்லை.
இதனால் தமிழர் அரசியலுக்கு இவர்களால் ஒரு புல்லைத்தானும் பிடுங்கிப் போட முடியவில்லை. மாறாக 1977 தேர்தலில் வெற்றி பெற்றதும் இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு சென்று சத்திய பிரமாணம் செய்து நாடாளுமன்ற பதவியை ஏற்றதன் மூலம் இலங்கையின் ஒற்றை ஆட்சியை ஏற்றுக்கொண்டது மாத்திரமல்ல இலங்கை ஜனநாயக சோஷல்ச குடியரசின் சிங்கள பௌத்த முதன்மைவாத யாப்பை ஏற்றுக்கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு அந்த அரசுக்கு விசுவாசமாக சேவகம் செய்தார்கள் என்பதையும் இங்கே வரலாறு பதிவு செய்துள்ளது.
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் தேர்தல் வெற்றியைப் பெற்றவர்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் குறிப்பிட்டது போன்று "நிழல்ல அரசாங்கத்தை" இவர்கள் அமைக்கவில்லை. மீண்டும் பண்ணாகத்தில் கூட வேண்டியவர்கள் சிங்களத்தின் பாராளுமன்றத்தில் கூடி விட்டார்கள் என்பதோடு, தமிழ் மக்களையும் ஏமாற்றி விட்டார்கள்.
தமிழ் மக்கள் தங்களது ஜனநாயக வாக்குரிமை மூலம் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட தமிழ்மக்களின் இறைமையை மக்களின் விருப்புக்கு மாறாக சிங்கள நாடாளுமன்றத்துக்கு சென்ற தமிழ் மக்கள் தமக்கு வழங்கிய இறைமை என்ற அதிகாரத்தை சிங்கள நாடாளுமன்றத்துக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டார்கள் என்ற குற்றத்தையும் இவர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
அதுமட்டுமல்லாது மக்களுக்கு கொடுத்த ஆணையை இவர்கள் நிறைவேற்ற முடியாவிட்டால் ஜனநாயக முறைப்படி அன்று செய்த தவறுக்காக இந்த கட்சியினர் தமிழ் மக்களிடம் ஜனநாயக முறை தழுவி ஒரு பகிரங்க மன்னிப்பு கோரலையாவது இன்று வரை கோரவில்லை என்பது இவர்களிடம் இந்த நிமிடம்வரை ஜனநாயக முறைமையும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
வழக்காடு மன்றப்பேச்சு
நூற்றாண்டுகால தமிழர் அரசியலில் விண்ணப்பம், வேண்டுகோள், நாடாளுமன்ற விவாதப்பேச்சு, வழக்காடு மன்றப்பேச்சு என்பவற்றின் தோல்வி தமிழ அரசியலை பன்னாகத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
வட்டுக்கோட்டை தீர்மானம் வரை தமிழ் மக்களுடைய கொள்கை என்பது முற்றிலும் ஜனநாயக முறை தழுவியதாக இருந்தது. பட்டுக்கோட்டை தீர்மானத்தின் செயலாற்றல் இன்மையின் தோல்வி தமிழ் மக்களுக்கு சமாதான வழியில் தீர்வு கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்த்தி ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் மீது திணித்தது.
ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு இலங்கையின் நாடாளுமன்றத்துக்குள்ளோ, அல்லது அரசியல் யாப்புக்குள்ளே தீர்வு கண்டுவிட முடியாது என்பதை இலங்கை தீவுக்கு வெளியே பிராந்திய நாடான பூட்டானில் திம்பு பேச்சு வார்த்தை மூலம் பிராந்திய அரசியலுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க முற்பட்டது.
அந்த முயற்சியின் தோல்வியடைந்து இந்திய இலங்கை ஒப்பந்தம் என்கின்ற சர்வதேச தலையீட்டின் மூலமே தமிழ் மக்களுக்கான ஒரு பிராந்திய அலகை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை சிங்கள தேசத்திற்கு உருவாக்கியது.
ஆயினும் அதுவும் நடைமுறைப்படுத்தப்படாமையின் விளைவு தொடர் ஆயுத போராட்டத்தின் பரிமாண வளர்ச்சி நோர்வேயின் சர்வதேச மத்தியத்துடனான பேச்சுவார்த்தை வரை சென்று உலகின் முக்கிய நகரங்களில் பேச்சுக்கள் நடத்தப்பட்டமை என்பது இலங்கை தமிழர்களின் பிரச்சினை சர்வதேசரீதியாக அணுகப்பட்ட ஒரு வரலாற்று கட்டத்தை அடைந்தது.
ஆயினும் தமிழ் மக்களுடைய அரசியலில் ஏற்பட்ட தவறுகள் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் என்ற கொள்கையை முள்ளிவாய்க்காலில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது.
இப்போது தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். நாம் எங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டு இருக்கிறோமோ அங்கிருந்துதான் அடுத்தகட்டப் பயணத்தை ஆரம்பிக்க முடியும். தமிழ் மக்களுக்கான தீர்வு இலங்கைக்கு வெளியே சர்வதேச அழுத்தத்தின் மூலமும் சர்வதேச ஆதரவின் மூலமே அடைய முடியும் என்ற தத்துவார்த்த உண்மையிலிருந்து தமிழ் மக்கள் தமது பிரதான எதிரியை வீழ்த்துவதற்கான மூலோபாயங்களை வகுக்க வேண்டும்.
அந்த முழுவாயத்தின் முக்கிய பகுதி தமிழ் மக்கள் தமக்கான ஒரு வெளியுறவுக் கொள்கையை வரைய வேண்டும். தமிழ் மக்கள் தமது பிரச்சனையை சர்வதேச மயப்படுத்தி சர்வதேச அரசுகளின் ஆதரவினை திரட்டுவதற்கு ஏற்ற வகையில் அந்த வெளியுறவுக் கொள்கை வரையப்பட வேண்டும்.
இங்கே சர்வதேசம் என்பது ஒரு புனிதப் பதம் கிடையாது. அது நாடுகளை அணிகளாக வகுத்து தத்தமது தேவைக்கு ஏற்றவாறு கையாளுகின்ற வித்தைகளால் சர்வதேச உறவுகள் என்ற பரிமாணத்தை அடைய முடிகிறது. அதாவது சர்வதேசம் என்பது ஒரு காராம்பசுவாய், கற்பகதருவாய், ஒரு காமதேனுவாய் கேட்கும் வரமெல்லாம் தரவல்ல ஒன்றல்ல. நாடுகளை நாடுகளால் கையாள்வதற்கு பெயர்தான் சர்வதேச உறவுகள்.
சர்வதேசமாக காணப்படும் உலக நாடுகள் அனைத்தையும் தமது தேவை கேட்டவாறு எந்த நாட்டை அணி சேர்த்து, எந்த நாட்டை ஓரம்கட்டி, எந்த நாட்டு கையாண்டு, எந்த நாட்டை பயன்படுத்தி தத்தமக்கான வெற்றியை ஈட்டுவதுதான் சர்வதேச உறவுகள் ஆகும்.
சர்வதேச உறவில் நல்லதும் கெட்டதும் கொண்ட,சூதும் வாதம் மிக்க தீட்டும் துடக்கும் உள்ள எதிரும் புதிருமான, நட்பும் பகையும் நொதுமலும் கொண்ட, சூதும் வாதும் மிக்க, புகழ்ச்சியும் இகழ்ச்சியும், வஞ்சகமும், சூழ்ச்சியும், பொறாமையும், ஏற்றத்தாழ்வும், ஆதிக்க அகங்காரமும் மிக்க ஒரு வினோதமான கலவையை கொண்ட பன்னாடுகளும் தத்தம் நலன்களை அடைவதற்காக முட்டி மோதி தமக்கான பங்கை பறித்துக்கொள்கின்ற அரசியல் ஆடுகளமே சர்வதேச உறவுகள் ஆகும். பங்கு போடாமல் பங்கு கொடுக்கப்படாமல் அந்த ஆடுகளத்தில் சாகச விண்ணனார்களாய் வித்தைகாட்ட முடியாது.
அவரவருக்குறிய பங்கு கொடுத்தலே சர்வதேச அரசியல. உறவாகும். நமக்கு இயலாதவற்றை தமக்குத் தெரியாதவத்தை மற்றவர் மீது பழிசுமத்துவது அறிவியலுக்கு முரணானது. உலகம் முற்றிலும் நலன் சார்ந்தது.
நலன்களே அனைத்தையும் தீர்மானிக்கின்றன. ஆயினும் ஒரு சிலருடைய தன்நலனட்ட செயல்கள் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரும்பாங்காற்றுகிறது. இங்கே தனி நலன்கள் இல்லை என்று சொல்லப்பட்டாலும் அதனுடைய பக்க நலன்கள் எங்கேயோ ஒரு மூலையில் ஒரு அணுவளவாயினம் இருக்கவே செய்யும்.
ஆயினும் இவற்றைக் கடந்தே ஒரு சமூகத்திற்கான பணியை செய்கின்றவன் எவனோ அவனே இந்தப் பிரபஞ்சம் வரை நல்ல தலைவனாக உயிர் வாழ்பவன் ஆகிறான். ஆகவே இப்போது தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் மரணித்த இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களின் மரணத்தில் இருந்து எஞ்சி இருக்கின்ற தமிழர்களுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
அந்த அரசியல் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்க நினைக்கின்ற பிரதான எதிரியாகிய பௌத்த சிங்கள பேரினவாதத்தை மட்டுமே இலக்கு வைத்து நமக்கான அரசியல் வேலை திட்டத்தை வரைய வேண்டும். ஆகவே இப்போது தமிழ் அரசியல் தலைமைகள் தம்மை தத்துவ விசாரணைக்கு உட்படுத்தி முற்றிலும் ஜனநாயக முறை தழுவிய ஒரு தமிழ்த் தேசியக் கட்டுமானத்திற்கு செல்ல வேண்டும்.
அத்தகைய ஒரு தமிழ்த் தேசியக் கட்டுமானத்துக்கு செல்வதற்கு தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பதற்கான ஒரு பலமான, அறிவுபூர்வமான, நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு அரசியல் வேலை திட்டம் வரையப்பட வேண்டும். அந்த வரையப்பட்ட அரசியல் வேலைத்திட்டத்தின் ஊடாகவே வெற்றிகரமான ஒரு போராட்ட அரசியலை முன்னெடுக்க முடியும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 05 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
