வல்வெட்டித்துறைத்துறையில் நடந்த தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு: சிவாஜிலிங்கம் நினைவுப்பகிர்வு
வல்வெட்டித்துறைத்துறையில் தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு இடம்பெற்று 55 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, அதன் வரலாற்றை வால்வெட்டித்துறை நகரசபையின் தலைவரான எம்.கே சிவாஜிலிங்கம் எடுத்துரைத்துள்ளார்.
நேற்று(07.02.2026 இரவு வல்வெட்டித்துறை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதில், தமிழ்த் தேசியக்கட்சியின் வடமராட்சி - வல்வெட்டித்துறை அமைப்பாளரான விமலதாஸ் கவிச்செல்வன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினரான செல்வராசா விதுசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
சமர்ப்பிக்கப்படவுள்ளது தேசிய மின்சக்தி கொள்கை மற்றும் தேசிய மின் கட்டணக் கொள்கை தொடர்பான அமைச்சரவை பத்திரம்
தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 1971 ஆம் ஆண்டு மாசி மாதம் 07ஆம் திகதி தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமை மாநாடு யாழ்ப்பாணம் வடமராட்சி - வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.
அன்று வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்த ஞானமூர்த்தி, சபாரத்தினம்பிள்ளை, அரச நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாக இருந்த வேற்பிள்ளை ஆகிய மூவரும் மக்களுடன் இணைந்து தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமை மாநாட்டைக் கூட்டி இருந்தார்கள்.

அத்துடன், 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசாங்கம் புதிய அரசியலமைப்பை கொண்டு வர எடுத்த முயற்சியை தொடர்ந்து தமிழ்மக்களிடம் ஒற்றுமை வர வேண்டும் என்ற அடிப்படையிலே இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் சுயாட்சிக் கழகம், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி ஆகிய நான்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டு அன்றைய யாழ்ப்பாண மேயராக இருந்த நாகராஜா தலைமையிலே ஒற்றுமை மாநாடு வல்வெட்டித்துறையில் உள்ள எட்வேர்ட் தங்கவடிவேல் ஐயாவின் வீட்டில் இடம்பெற்றது.
அதில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இலங்கை அரசாங்கத்தை நோக்கி ஒன்பது அம்சக் கோரிக்கைகளை வைப்பதென்றும், இந்த நான்கு கட்சிகளும் ஒற்றுமையாக இயங்குவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டு இது தமிழர்களினுடைய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி என அறிவிக்கப்பட்டது.
அப்போது, ஆதரவாளர்களோடு இணைந்து வெடி கொழுத்தி பாடசாலை மாணவனாக நானும் மகிழ்ச்சியிலே ஆரவாரப்பட்டதனை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
இப்போது அநுர அரசிலும் ஒரு புதிய அரசியலமைப்பு வந்திருக்கின்ற நிலையில் நாங்கள் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு கட்சிகளிடையே ஒரு பொது உடன்பாட்டை எட்டி ஒரே கோரிக்கையை நாங்கள் வைப்போமாக இருந்தால் அது மிகவும் பலம் பொருந்தியதாக இருக்கும்.
அத்துடன், கடந்த 1976 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மான பிரகடனத்திலே இது "வல்வெட்டித்துறையிலே கருவாகி திருகோணமலையிலே உருவாகி" என்கிற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வரலாற்று சம்பவம் இடம்பெற்று 55 ஆண்டுகள் நேற்றோடு நிறைவடைந்திருக்கின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.